ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்ட திறனுாட்டல் மாநாடு, விழுப்புரம் அடுத்த கப்பியாம்புலியூர் ஏ.ஆர்.பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கருவூலக கணக்குத் துறை முதன்மைச் செயலர் தென்காசி ஜவஹர் தலைமை தாங்கி, பேசியதாவது:
தமிழகம் முழுவதும் உள்ள சம்பளம் மற்றும் கணக்கு அலுவலகங்கள், மாவட்ட கருவூலங்கள் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் மூலம், கடந்த 207-18ம் நிதி ஆண்டில், ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 824 கோடி ரூபாய் அரசின் நிதி வரவு - செலவாக கையாளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு நிதி மேலாண்மை தொடர்பான அரசுப் பணிகள் திறம்பட நடைபெறவும், கருவூலப் பணிகளை மேம்படுத்தும் பொருட்டும், பிரத்யேகமான வழிமுறைகளை கையாண்டு, மனித வள மேலாண்மையை ஒருங்கிணைத்து, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக அரசு ரூ.288 கோடியே 91லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுடில்லியில் உள்ள சம்பளம் மற்றும் கணக்கு அலுவலகத்தில் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் உள்ளிட்ட 29 ஆயிரம் அலுவலர்கள், தங்களது பட்டியல்களை நேரடி இணையம் மூலம் கருவூலத்தில் பட்டியல் சமர்ப்பிக்க முடியும். கணக்குகள் அனைத்தும், உடனுக்குடன் அறிந்து கொள்ள இயலும்.
கடந்த 2017-18 ம் நிதி ஆண்டில், விழுப்புரம் மாவட்டத்தில் ரூ. 573 கோடியே 64 லட்சம் ஓய்வூதியமாகவும், ரூ.2,739 கோடியே 31 லட்சம், அரசு ஊழியர்களுக்கான சம்பளத் தொகையாகவும், மாவட்ட கருவூலம் மற்றும் 9 சார் நிலை கருவூலங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதி ஆண்டில் மட்டும், அரசின் வரவினமாக ரூ.631 கோடியே 43 லட்சம், விழுப்புரம் மாவட்ட கருவூலங்கள் மூலமாக பெறப்பட்டுள்ளது.
இவ்வாறுகருவூலக கணக்குத் துறை முதன்மைச் செயலர் பேசினார்.
Post a Comment