அரசு பணிகளில் பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் நடைமுறை மாநில அரசுகளுக்கும் பொருந்தும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு மத்திய அரசு பணிகளில் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுதொடர்பான வழக்கு கடந்த 5 ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு பணிகளில் பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
ஆனால், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பில் மாநில அரசுகளுக்கும் பொருந்துமா என்பதில் சில குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மாநில அரசுகளுக்கும் பொருந்தும் என்று மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறினார்.
மேலும் எஸ்சி, எஸ்டி.,க்கு இடஒதுக்கீட்டை பின்பற்றுவது குறித்த தெளிவான சுற்றறிக்கை குறித்த விவரங்களை மாநிலங்களுக்கு விரைவில் அனுப்பப்படும் என்று தெரிவித்தார்