எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு முதல் நாளான நேற்று
17,598 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது.
17,598 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது.
தமிழகத்தில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளது. இவற்றில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீடுக்கு போக 2,594 இடங்கள் உள்ளது.
2 அரசு பல்நோக்கு மருத்துவகல்லூரிகளில் உள்ள 200 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் 30 போக 170 இடங்கள் உள்ளன. இந்த நிலையில், மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகம் நேற்று தொடங்கியது.
இதன் படி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் விண்ணப்பத்தை பெற காலை 9 மணி முதல் மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் வரிசையில் காத்திருந்தனர்.
காலை 10 மணிக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி டீன் வசந்தா மணி விண்ணப்ப விநியோகத்தை தொடங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து, மாணவ, மாணவிகள் அரசு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ500ம், சுய நிதி நிர்வாக ஒதுக்கீட்டிற்கான விண்ணப்ப கட்டணம் ரூ1000 டிடியாக எடுத்து அளித்து விண்ணப்பங்களை பெற்று சென்றனர்.
இதே போல், சென்னை அரசு மருத்துவ கல்லூரி டீன் ஜெயந்தி, ஓமந்தூரர் அரசு மருத்துவ கல்லூரி டீன் நாராயணபாபு உள்பட தமிழகம் முழுவதும் அந்தந்த அரசு மருத்துவ கல்லூரிகளின் டீன்கள் விண்ணப்ப விநியோகத்தை துவங்கி வைத்தனர். மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது.
முதல் நாளான நேற்று அரசு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 11,967 விண்ணப்பங்களும், தனியார் கல்லூரிகளுக்கான நிர்வாக ஒதுக்கீட்டிற்கு 5,631 விண்ணப்பங்களும் என 17,598 விண்ணப்பங்களும் விநியோகம் செய்யப்பட்டது.
விண்ணப்பங்களை பெறுவதற்கு ஜூன் 18ம் தேதி கடைசி நாள் ஆகும்.
விண்ணப்பங்கள் தேர்வு குழுவுக்கு சென்று சேர ஜூன் 19ம் தேதி கடைசி நாள் ஆகும். எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வரும் 28ம் தேதி வெளியிடப்படுகிறது.
இதை தொடர்ந்து, முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 1ம் தேதி முதல் 5ம் தேதி வரையும், 2ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 16ம் தேதி முதல் 21ம் தேதி வரையும் நடைபெற உள்ளது.