Title of the document


சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரை மக்கள் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அன்புடன் அழைக்கின்றனர்.

பாரதி தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயர் - இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு டிசம்பர் 11, 1882ல்  பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று வீட்டில் அழைக்கப்பட்டார்.

தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே தனக்கு உள்ள கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். பாரதி 1897 ஆம் ஆண்டு தனது 15-ஆம் வயதில் செல்லம்மாளை மணந்தார்.

எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சிப் பாரதி என்ற பட்டம் வழங்கினார். தமிழ் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காள மொழி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். அத்துடன் பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார். வாழ்நாள் முழுதும் பல்வேறு காலகட்டங்களில் இதழாசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றினார்.

உடல் நிலை சரியில்லாத நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் செப்டம்பர் 11, 1921 அன்று இயற்கை எய்தினார்.

பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கிய படைப்புகள் என்பது பாரதியாருடையதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post