தமிழகம் கர்நாடகம் இடையே நீடித்து வரும் காவிரி நதிநீர்ப் பங்கீட்டிற்கு காவிரி மேலாண்மை வாரியம் தீர்வாக பார்க்கப்படுகிறது.
மத்திய நீர்ப்பாசனத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய இந்த மேலாண்மை வாரியத்திற்கு ஒரு முழு நேரத் தலைவரையும் இரண்டு முழு நேர உறுப்பினர்களையும் மத்திய அரசு நியமிக்க வேண்டும்.
காவிரி நதி நீரை பங்கிட்டுக்கொள்ளும் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் தலா ஒரு உறுப்பினரை நியமிக்க வேண்டும். மேலாண்மை வாரியத்தில் விவாதிக்கப்பட்டு எடுக்கப்படும் எந்த ஒரு முடிவும் பெரும்பான்மை அடிப்படையிலானது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட நொடியிலிருந்து தமிழகத்தின் கீழ்பவானி, அமராவதி, மேட்டூர், கர்நாடகாவின் ஹேமாவதி, ஹேரங்கி, கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் கேரளாவின் பாணாசுரசாகர் ஆகிய அணைகள் காவிரி மேலாண்மை வாரியத்தின் ஒருங்கிணைந்த வழிகாட்டுதலின்படியே சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் இயக்கப்பட வேண்டும்.
மேலாண்மை வாரிய உறுப்பினர்கள் விரும்பினால் எந்த ஒரு அணை, நீர்த்தேக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்ய முடியும். மேலாண்மை வாரியத்தின் பணிகளுக்கு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஒத்துழைக்க மறுத்தால் அவற்றின் மீது மத்திய அரசின் உதவியை கேட்க முடியும்.
காவிரி மேலாண்மை வாரியத்திற்கு சட்ட அங்கீகாரம் வேண்டும் என கூறும் மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் எழுத்தாளர் முத்துக்குமார், கச்சத்தீவு விவகாரத்தில் நாடாளுமன்றத்தை கூட்டாதது ஏன் என கேள்வியெழுப்புகிறார்.
மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட பின்பு வாரியத்தின் உத்தரவுகளுக்கு மாநில அரசுகள் ஒத்துழைப்பு அளிக்காவிட்டால் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட நோக்கம் நிறைவேறுமா என்பதே முக்கிய கேள்வியாக இருக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்த பின்பும் கூட, அதற்கு சட்ட அங்கீகாரம் வழங்க வழி இருப்பதாகச் சொல்கிறார் வழக்கறிஞர் ஆனந்த் கண்ணன் .
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தள்ளிப் போடுவதை, மத்திய அரசு அரசியல் சாசனத்தை காரணம் காட்டி தப்பிப்பதாக கூறுகிறார் எழுத்தாளர் பத்ரி. நாடாளுமன்ற அவைகளைக் கூட்டி, வாரியம் அமைக்கும் பாஜக அரசின் முடிவை வரவேற்றாலும், மத்திய அரசு கர்நாடக தேர்தலை முன்னிறுத்தி செயல்படுவதாகவே அவர் குற்றம்சாட்டினார்.
காவிரி தொடர்பான வழக்குகள் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு, வரும் 18ம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது. வழக்கு இனி எந்த திசையில் செல்ல போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
إرسال تعليق