Title of the document
திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இருந்து மாணவர், மாணவிகளை சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஆட்சியர் கு. ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.
இமாசல பிரதேசம், குலுமணாலி பகுதிக்கு அண்மையில் சுற்றுலா சென்ற திருச்சி காட்டூர் தனியார் பள்ளி மாணவர்கள் 32 பேர் மழை, வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர். இருப்பினும் அவர்கள் பத்திரமாக சொந்த ஊர் திரும்பினர். இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் பள்ளிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி கூறியது:
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளில் இருந்து கல்விச் சுற்றுலா செல்வதற்கு முன் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் ஒரு மாதத்துக்கு முன்பே உரிய முன் அனுமதி பெற வேண்டும். நீர்நிலைகள் உள்ள பகுதிகளுக்கு அழைத்துச் செல்லக் கூடாது. பெற்றோரின் அனுமதி அவசியம்.  மேலும், சுற்றுலா செல்லும் இடத்தை குறிப்பிட்டு பெற்றோரின் ஒப்புதல் கையெழுத்து இல்லாமல் அழைத்துச் செல்லக் கூடாது.
பாதுகாப்பு இல்லாது விபரீதம் ஏற்படும்போது பள்ளி நிர்வாகம் மட்டுமல்லாது கல்வித் துறையும் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, அனைத்து வகை பள்ளிகளும் சில நிபந்தனைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
சுற்றுலா செல்லும் நாளுக்கு 2 மாதங்களுக்கு முன்பே முறையான திட்டமிடல் வேண்டும். பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் நடத்தி ஒப்புதல் பெற வேண்டும். சுற்றுலா அவகாசம் 4 நாளுக்கு மேல் இருத்தல் கூடாது. பருவநிலை, வானிலை அறிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே திட்டமிட வேண்டும். சுற்றுலா செல்லும் நாள், இடம், வாகனம் திட்டமிட்டு, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பு குறித்து நாள்தோறும் பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும். 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் பாதுகாப்பாளராகச் செல்ல வேண்டும்.  கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்களுக்கு செல்வதைத் தடை செய்ய வேண்டும்.
பேருந்துகளில் சென்றால் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பேருந்து பயணத்தை தவிர்க்க வேண்டும். அனுபவமுள்ள ஓட்டுநரை நியமிக்க வேண்டும். முதலுதவி மருந்துகளும் அவசியம். மாணவர்களை எக்காரணத்துக்காகவும் தனியே அனுப்பக் கூடாது. அவ்வப்போது மாணவர் எண்ணிக்கையைச் சரிபார்த்து ஒரு இடத்தில் இருந்து நகர வேண்டும்.
கல்வி சார்பான சுற்றுலாவாக இருத்தல் வேண்டும். லாப நோக்கத்துடன் இருத்தல் கூடாது. பெற்றோர்களுக்கு எந்த நிர்ப்பந்தமும் அளிக்கக் கூடாது. முன்அனுபவமுள்ள சுற்றுலா வழிகாட்டியை அழைத்துச் செல்ல வேண்டும். இந்த நிபந்தனைகளை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post