Title of the document

வடவள்ளியில் உள்ள, 'கணிதம் இனிக்கும்' ஆய்வு மையத்தில், மாணவர்கள் கணிதத்தை எளிதாக கற்க உதவும், 'கணித பெட்டகம்' அறிமுகப்படுத்தப்பட்டது.

வடவள்ளியை சேர்ந்த ஓய்வு பெற்ற கணித ஆசிரியர் உமாதாணு,80. சிறுவயதிலிருந்தே கணிதத்தின் மீது அளப்பரிய ஆர்வம் கொண்டிருப்பவர். ஓய்வு பெற்ற பின்னர், தனது 35 ஆண்டுகால அனுபவங்களை வீணாக்காமல், 'கணிதம் இனிக்கும்' எனும் பெயரில் ஆய்வு மையம் துவங்கி, கணிதம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார்.

பல சிக்கலான கணிதங்களுக்கு, சமன்பாடு இல்லாமலே, எளிய உபகரணங்கள் வாயிலாக, சில வினாடிகளில் தீர்வு காணும் திறன் படைத்தவர். இவரது திறனை பாராட்டி, பல்வேறு மாநிலங்கள், நாட்டு அமைப்புகள் அழைத்து, கவுரவப்படுத்தியுள்ளன.மனிதநேய பேரவை எனும் அமைப்பை உருவாக்கி, சமூக சேவைக்கான விருதுகளையும் பெற்றுள்ளார்.
கடந்த முதல் தேதி, தனது 81வது பிறந்த நாளையொட்டி, மாணவர்கள் எளிதில் கணிதத்தை கற்க உதவும் வகையில், 'கணித பெட்டகம்' ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வடவள்ளியில் உள்ள கணிதம் இனிக்கும் ஆய்வு மையத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்த பெட்டகத்தை அவர் வெளியிட்டார்.
இது குறித்து ஆசிரியர் உமாதாணு கூறியதாவது:

கணிதம் மிக கடினமானது என பலர் கருதுகின்றனர். அது தவறு. கணித சூத்திரங்களை அனைவரும் மனப்பாடம் செய்து பயன்படுத்துவதால், அது கடினமாக தோன்றுகிறது.எனவே, கணித சூத்திரங்களை மனப்பாடம் செய்யாமல் நினைவில் கொள்வதற்காக, பல கட்ட முயற்சிக்கு பின், இந்த கணித பெட்டகத்தை உருவாக்கி உள்ளேன்.
இந்த பெட்டகத்தில், சூத்திரங்களை நினைவில் கொள்ள உதவும் உபகரணங்கள், உயரங்களையும், தூரங்களையும் கணக்கிட உதவும் கிளீனா மீட்டர், எண் கோட்பாட்டின் பயன்பாடுகள், கணிதத்தை இனிதாக கற்க உதவிடும், 'உடனடி உதவிக்கரம்'(Mathmiss Ready Reackoner) உள்ளிட்டவை அடங்கியுள்ளன.
ஒவ்வொரு பள்ளியிலும் இந்த 'கிட்' பயன்படுத்தி கற்பித்தால், கணிதத்தை எளிதாக மாணவர்கள் கற்றுக்கொள்வர். மாணவர்களின் நலன் கருதி, தமிழக பள்ளிக்கல்வித்துறை இதற்காக நடவடிக்கை எடுக்க முன்வந்தால் மகிழ்ச்சி.இவ்வாறு, ஆசிரியர் உமாதாணு கூறினார்.

இது குறித்த மேலும் விவரங்கள் அறிய, 93604 82003 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post