மதுரை: உலக அளவில் கொரோனாவின் ஆட்டம் குழந்தைகளிடம் தோல்வி அடைவதற்கான காரணம் வெளியாகி உள்ளது.
பொதுவாக
ஒரு பாதிப்பு என்றால், பெரியவர்களை விட குழந்தைகளைத்தான் எளிதில்
தாக்கும். ஆனால் பூமிப்பந்தையே நடுங்க வைத்துள்ள கொரோனா (கோவிட்-19)
வைரஸால், தனது
சேட்டையை குழந்தைகளிடம் முழுவீச்சில் காட்ட
முடியவில்லை. அனைவரையும் போல அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டாலும்,
பெரியவர்களை விட குழந்தைகள் எளிதில் மீண்டு விடுகின்றனர். உலக அளவில் ஒரு
லட்சத்தை கடந்து விட்ட மரணத்தில், குழந்தைகளின் எண்ணிக்கை விரல் விட்டு
எண்ணும் அளவு தான்.
கோவிட்-19க்கு தாய்
வீடான சீனாவில் பாதிக்கப்பட்டவர்களில் 2 சதவீதம் பேர் குழந்தைகள். அதிலும்
இறந்தது ஒரே ஒரு குழந்தை தான் என்கிறது புள்ளி விவரம். இந்தியாவில்
300க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் இறப்பு ஏற்பட்டதாக தகவல்
இல்லை. தமிழகத்தில் கோவை பெண் டாக்டரிடம் இருந்து 10 மாத குழந்தைக்கு
கொரோனா தொற்று ஏற்பட்டது.
தாய்க்கு முன்
அக்குழந்தை பூரண குணம் பெற்றுவிட்டது. கொலைவெறி கொரோனாவிடம் இருந்து மனித
இனத்திற்கு கிடைத்த ஒரே ஒரு கருணை இதுதான். குழந்தைகளை கொரோனா வைரஸ்
பாதிக்காததற்கான ஆராய்ச்சியில் பல்வேறு தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மதுரை குழந்தைகள் நல நிபுணர் முருகன்ஜெயராமன் கூறியதாவது:
கொரோனா
குடும்பத்தில் ஏழு வகை வைரஸ்கள் உள்ளன. அக்குடும்பத்தில் புதிதாக தோன்றிய
வைரஸ் தான் தற்போது உலகம் முழுவதும் பரவி வேட்டை நடத்துகிறது. ஆனால் கொரோனா
குடும்பத்தில் உள்ள வேறு வைரஸ்கள், வேறு குடும்ப வைரஸ்களால் குழந்தைகள்
ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருப்பர். இதனால் சளி, இருமல், ஜலதோஷம்
வந்திருக்கும்.
அப்போதே பாதிப்பை
எதிர்த்து போராட குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி
வென்றிருக்கும். தொடர்ந்து குழந்தைகளின் உடலில் நீடிக்கும். இப்போது பரவும்
கொரோனா வந்தாலும் எளிதில் போராடி இது வென்றுவிடும்.
ஏ.சி.இ.,2 புரதம்
இன்னொரு
முக்கிய காரணம் ஏ.சி.இ.,-2 என்னும் புரதம். இது தான் நமது நுரையீரலுக்குள்
கொரோனா செல்ல வழி வகுக்கிறது. இப்புரதம் பெரியவர்களின் மூச்சுக்குழாயில்
மேல் மற்றும் கீழ் பகுதிகளில் நன்றாக வளர்ந்திருக்கும். மேல்பகுதியில் இதை
பிடித்து மூச்சுக்குழாயின் அடிப்பகுதியை அடைந்து நுரையீரலுக்குள் கொரோனா
நுழைந்து விடுகிறது.
பின்னர் நுரையீரலை
தாக்கத்துவங்கி, இதர உறுப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி மரணத்திற்கும்
வித்திடுகிறது. ஆனால் குழந்தைகளுக்கு ஏ.சி.இ.,-2 புரதம் வளர்ந்திருக்காது.
இதனால் மூச்சுக்குழாயில் இருந்து கொரோனாவால் நுரையீரலை அடையமுடியாது. எனவே
தான் குழந்தைகளை கொரோனா பாதித்தாலும், மரணம் வரை அழைத்துச் செல்ல
முடிவதில்லை.
மலேரியா மருந்து
இந்திய
குழந்தைகளுக்கு இன்னும் பாதுகாப்பு அதிகம். ஏனென்றால் நம் நாட்டில் பிற
நாடுகளை விட மலேரியா பாதிப்பு அதிகம். இதை தடுக்க குழந்தைகளுக்கு
ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்னும் மருந்து செலுத்தப்பட்டிருக்கும்.
இம்மருந்தை தான் தற்போது பல உலக நாடுகள் கொரோனா சிகிச்சைக்கு
பயன்படுத்துகின்றன.
ஏற்கனவே இந்திய
குழந்தைகளின் உடலில் இம்மருந்தின் தாக்கம் இருக்கும். இதுவும் கொரோனா
வந்தால் சண்டை போடும். எனவே தான் கொரோனாவால் குழந்தைகளிடம் தனது முழுபலத்தை
காட்ட முடிவதில்லை.
நுரையீரலை எப்படி அடைகிறது
ஏ.சி.இ.,-2
புரதம் நமது வாய், நாக்கு, தொண்டை, மூச்சுக்குழாய், சிறுகுடல் என பல
இடங்களில் உள்ளது. கொரோனாவின் உடலை சுற்றியுள்ள கீரிடம் போன்ற அமைப்பு, இதை
இறுக்கமாக பிடித்துக் கொண்டு நகர்கிறது. அப்படிதான் வாய், மூக்கு
பகுதியில் இருந்து தொண்டை, மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது.
அங்கு செல்களை பாதித்து, தாக்குதலை துவக்குகிறது.
Post a Comment