Title of the document
பில் கட்டலைனா உடனே கரண்ட் கட்... வருகிறது ஸ்மார்ட் மீட்டர்!
SMART METER


விரைவில் நம் அனைவரின் வீடுகளிலும் விரைவில் ஸ்மார்ட் மின்சார மீட்டரைப் பொருத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடைசித் தேதிக்குள் மின் கட்டணத்தைச் செலுத்தவில்லையென்றால், நம் வீட்டுக்கு வரும் மின்சாரம் தானாகவே 'கட்' ஆகிவிடும்; மீட்டர் ஓடுவதும் நின்றுவிடும்.




அதன் பின்னர், எப்போது நாம் அந்தக் கட்டணத்தைச் செலுத்துகிறோமோ, அப்போது மீட்டர் மீண்டும் ஓடத் தொடங்கும். Smart Meter National Program என்ற திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் ஸ்மார்ட் மின்சார மீட்டர்களைப் பொருத்தவுள்ளதாக மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே. சிங் தெரிவித்துள்ளார்.


இதற்கான ஆன்லைன் டேஷ்போர்டு ஒன்றையும் அவர் சமீபத்தில் தொடக்கி வைத்துள்ளார். இத்திட்டம் தொடர்பான அனைத்து விவரங்களும் இதில் கிடைக்கும். மொபைல் ரீசார்ஜ் போல Smart Meter National Program திட்டத்திலும் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வசதிகள் உள்ளன.


நம் மின் உபயோகக் கட்டணத்தை குறைந்தது ரூ.50 முதல் இதன் மூலம் செலுத்தலாம். மேலும், தவணை முறையிலும் நம் மின் கட்டணத்தை இத்திட்டத்தின் மூலம் செலுத்த முடியும்.

தேவைப்படும் நேரங்களில் நம் மின் மீட்டரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் முடியும் என்பதால், மின் திருட்டு உள்ளிட்ட பிரச்சனைகளிலிருந்து நாம் தப்பிக்கலாம். சில சமயங்களில் மின் மாற்றிகள் மூலம் நம் வீட்டுக்கு அளவுக்கு அதிகமாக மின் சப்ளை வர வாய்ப்புள்ளது.

அந்த சமயங்களில் இந்த ஸ்மார்ட் மீட்டர் உடனடியாக செயல்பட்டு, மின்சாரத்தைத் துண்டித்து விடும். மின் சப்ளை சீரான பிறகு, நமக்கு மீண்டும் மின்சாரம் கிடைக்கும். இத்திட்டம் ஏற்கனவே உத்தரப் பிரதேசம், டெல்லி, ஹரியானா மற்றும் பிஹார் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post