தொலைதூர கல்வியில் மருத்துவ படிப்புகள் துவங்கியதால் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை.க்கு 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதை அரசு பள்ளிகள் வளர்ச்சிக்காக செலவிட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு டாக்டர்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் னிவாசன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் சார்பில் எம்பிபிஎஸ் முடித்தவர்களுக்காக ஓராண்டு மற்றும் இரண்டாண்டு மருத்துவ பட்டய படிப்புகளை தொலைநிலைக்கல்வி திட்டத்தின் கீழான சேர்க்கை தொடர்பான அறிவிப்பு வெளியானது. இதற்காக மத்திய அரசிடமோ, இந்திய மருத்துவ கவுன்சிலிலோ எந்தவித அனுமதியும் பெறவில்லை. எனவே தொலைநிலை கல்வி திட்டத்தின்கீழ் மருத்துவம் சார்ந்த படிப்புகளை நடத்துவதற்காக வெளியிடப்பட்ட அறிவிப்பை சட்டவிரோதம் என்பதால், செல்லாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் விசாரித்து வந்தார். வழக்கில் நேற்று தீர்ப்பளித்தார். அதில், `இதனைப்போன்றே ஏற்கனவே பல வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. அந்த வழக்குகளில் நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவுகளை மீறியே தொலைநிலைக் கல்வித்திட்டத்தின் கீழ் மருத்துவம் சார்ந்த படிப்புகளை நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதை அனுமதித்தால் அதுவே பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாக அமையும். குறிப்பாக மக்களை தவறாக வழி நடத்துவதை போன்று அமைந்து விடும். எனவே, மனுதாரரின் கோரிக்கையை இந்த நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு 5 லட்சம் அபராதமாக விதிக்கப்படுகிறது. அந்தப் பணத்தை தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு செலவிடும் வகையில் பள்ளிக் கல்வித்துறை செயலரிடம் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.
Post a Comment