அரசு வேலையில் சேருவதற்கு பணம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த விவரம்: அரசு வேலை பெற்றுத் தருவதாக மோசடி செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்த விசாரணையின் இறுதியில், மோசடியில் ஈடுபட்டவரைப் போன்றே, பணம் கொடுத்தவர்கள் மீதும் குற்றம்சாட்டப்பட வேண்டும், அரசு வேலையை பணம் கொடுத்து குறுக்கு வழியில் பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தைப் போக்க பொதுமக்களிடம் காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், அரசு வேலை,மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை ஆகியவற்றுக்கு யாரும் பணம் கொடுக்கும் செயலில் ஈடுபடக்கூடாது, பணம் கொடுப்பவர்கள் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக காவல்துறை டிஜிபி பொது அறிவிப்பு வெளியிட வேண்டும். அதோடு, அனைத்து மண்டல ஐ.ஜி.க்களும், இது தொடர்பான விழிப்புணர்வை மேற்கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பணம் கொடுத்தால் நடவடிக்கை: இந்த உத்தரவின் அடிப்படையில் சென்னையில் உள்ள தமிழக காவல்துறையின் டிஜிபி அலுவலகம் வியாழக்கிழமை ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: அரசுப் பணி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியில் சேருவதற்கோ, மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேருவதற்கோ பொதுமக்கள் சட்டவிரோதமாக பணம் கொடுக்கல், வாங்கலில் ஈடுபடக் கூடாது. இதையும் மீறி அரசு வேலையில் சேருவதற்கோ, கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கோ சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்தால், இரு தரப்பு மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். முக்கியமாக இனி பணம் கொடுப்பவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment