Title of the document
பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில்,
இத்துறையில் எந்தெந்தவழிகளில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து ஆசிரியர்கள் பல்வேறுதகவல்களை தெரிவித்துள்ளனர்.



கல்வி சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அறிவொளியின் அலுவலகம் மற்றும் அவரது வீட்டில் புதன்கிழமை லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். 


மாணவர்களுக்கான ‘தேன் சிட்டு’ மாத இதழ்தயாரிப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதி, புதியபாடத்திட்ட தயாரிப்பு திட்டத்துக்கானநிதி, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு ஆன்லைன் மூலமாக தமிழ்கற்றுக்கொடுக்கும் ‘உலகமெல்லாம் தமிழ்’ திட்ட நிதி போன்றவை தவறாகபயன்படுத்தப் பட்டிருப்பதாக லஞ்சஒழிப்புத்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.பள்ளிகளில் கட்டிடம், ஆய்வகம்,குடிநீர் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதி, இலவச பாடப்புத்தகம், நோட்டு, சீருடை, காலணி, லேப்டாப், சைக்கிள் உள்ளிட்ட 14 விதமான நலத்திட்டங்கள், ஸ்மார்ட் கிளாஸ் என வெவ்வேறு திட்டங்களுக்காக மத்திய, மாநில அரசுகளிடம் இருந்தும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வெவ்வேறு துறைகள் மூலம் அவை நிறைவேற்றப்படுகின்றன. மேலும், ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி, பணியிடைப் பயிற்சி, கற்பித்தல் திறன் மேம்பாடு உள்ளிட்ட பயிற்சி திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 


இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் அறிவொளி மீது சுமத்தப்பட்டுள்ளது.
இப்பிரச்சினை தொடர்பாக ஆசிரியர்களும், கல்வியாளர்களும் தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர். 


தங்கள் பெயரைக் குறிப்பிட விரும்பாத நிலையில் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு:பொதுவாக பள்ளிக்கல்வித் துறையில் எழும் முதன்மையான குற்றச்சாட்டு ஆசிரியர் இடமாறுதலில் நடக்கும் முறைகேடுகள். பணிமூப்பு உட்படஇடமாறுதலுக்கென பல்வேறு விதிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டாலும் அவற்றையெல்லாம் மீறி தங்களுக்கு வேண்டியவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு கேட்கின்ற இடத்துக்கு இடமாறுதல் கொடுத்துவிடுகிறார்கள். 


இதற்காக குறிப்பிட்ட இடங்கள் மறைக்கப்படுகின்றன. மேலும், நிர்வாக இடமாறுதல் என்ற பெயரிலும் கணிசமான இடமாற்றங்கள் நடக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பொதுஇடமாறுதல் நேரத்தில் கலந்தாய்வின்போது முறைகேடு என்று சொல்லி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதும், மறியலில் இறங்குவதும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன.பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்படுகின்றன.



வெளிப்படையான முறையில் டெண்டர் விட்டு புத்தகங்கள் அச்சடிக்கப்படுவதாக சொல்லப்பட்டாலும், அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு அப்பணியை ஒதுக்கீடு செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை நிராகரித்துவிட முடியாது. இதேபோல, இலவச சீருடை, நோட்டுகள், காலணி, ஸ்கூல் பேக், சைக்கிள், லேப்டாப் என 14 விதமான பொருட்களைகொள்முதல் செய்வதிலும் இதே குற்றச்சாட்டு எழாமல் இல்லை.பெரும்பாலான நேரங்களில் அரசியல் தலையீட்டின் காரணமாக, சரியான பாதையில் இருந்து விலக வேண்டிய கட்டாய நிலைக்கு உயர்அதிகாரிகள் தள்ளப்படுகிறார்கள். 


இந்த வேலையை இன்னாருக்கு கொடுங்கள் என்று அதிகாரத்தில் இருப்பவர்கள் கட்டாயப்படுத்தும்போது வேறுவழியின்றி அதைச்செய்ய வேண்டிய நிலை, கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஏற்படுகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post