Title of the document


சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் கல்வி, கலாசார நிகழ்வுகள், கருத்தரங்குகள், மாநாடுகளை நடத்த பொது நூலகத் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து பொது நூலக இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: தெற்காசியாவில் உள்ள பெரிய நூலகங்களில் ஒன்றான சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பில் 3.75 லட்சம் சதுர அடியில் தரைத்தளத்தோடு 8 மாடிகள் கொண்ட முற்றிலும் குளிரூட்டப்பட்ட நவீன வசதிகளைக் கொண்ட நூலகம் ஆகும்.
1,280 பேர் அமரும் வசதி: இந்த நூலக வளாகத்தில் 1,280 நபர்கள் அமரக்கூடிய வகையில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய முற்றிலும் குளிரூட்டப்பட்ட கலையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலையரங்கில் அரசு விழாக்கள், பட்டமளிப்பு விழா, பள்ளி ஆண்டு விழா, கலை மற்றும் பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், தேசிய - மாநில அளவிலான தொழில் சார்ந்த மாநாடுகள், தேசிய- பன்னாட்டு நிறுவனங்கள், குழுமம் நடத்தும் ஆண்டு பொதுக் கூட்டங்கள், பிரசித்தி பெற்ற கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் நடத்தும் விரிவுரை நிகழ்ச்சிகள் மற்றும் அரசால் அனுமதிக்கப்படும் நிகழ்ச்சிகளின் பயன்பாட்டுக்கு அரசு விதிகளின்படி, வாடகைக்கு விடப்படும். மேலும் வாகனங்கள் நிறுத்துவதற்கான போதிய வசதிகள் உள்ளன.
ஒரு நாள் வாடகை எவ்வளவு?: இந்தக் கலையரங்கத்துக்கான ஒரு நாள் வாடகையாக ரூ.2 லட்சத்து 31,224 (இதர கட்டணங்கள், வரிகள் நீங்கலாக) என அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கட்டணச் சலுகை: தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி கலை, கலாசார, பண்பாடு நிகழ்ச்சிகள் மற்றும் புத்தக வெளியீடுகள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு மட்டும் நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு நாள் வாடகைக் கட்டணத்தில் 60 சதவீத தொகை தள்ளுபடி வழங்கப்பட்டு, ஒரு நாள் வாடகையாக ரூ.92,490 அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிகளை நடத்த விரும்புவோர் நிர்வாக அலுவலர், அண்ணா நூற்றாண்டு நூலகம், காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்புரம், சென்னை-600085 என்ற முகவரியிலும், 044- 22201033, 22201011, 9003212156 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறியுள்ளார்.
சர்ச்சைகளைக் கடந்து... கடந்த 2008-ஆம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டது முதல் இந்த அரங்கம் செயல்பட்டு வந்தது. இதையடுத்து 2012-இல் திருமண நிகழ்ச்சிகள், திரைப்பட விழாக்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்ற புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக கல்வி, கலை, கலாசாரம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த ஓரிரு ஆண்டுகளாக பராமரிப்பு உள்பட பல்வேறு காரணங்களால் நிகழ்ச்சிகள் எதுவும் இந்த அரங்கில் நடைபெறவில்லை.
தற்போது பொது நூலகத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக புதிய பொலிவுடன் தயாராகி உள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post