அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்களில் படித்த மாணவர்கள் 4 பேர் மட்டுமே, எம்.பி.பி.எஸ். படிப்புக்கு தேர்வானதற்கு, அவசர கோலத்தில் பயிற்சி அளித்ததே காரணம் என்றும், வரும் ஆண்டில் குறைந்தபட்சம் 500 மாணவர்கள் தேர்ச்சி அடைவார்கள் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பாலித்தீன் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், சிவகங்கையில் அரையாண்டு வினாத்தாள் எதுவும் திருடப்படவில்லை என்று கூறிய அவர், கதவை உடைத்த மாணவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
பள்ளிகளை மூடும் நோக்கம் அரசு இல்லை என்று கூறிய அமைச்சர் செங்கோட்டையன், 33 அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை என்றும், ஆயிரத்து 324 பள்ளிகளில், ஒன்பதுக்கும் குறைவான மாணவர்களே படிப்பதாகவும் தெரிவித்தார். எனவே, தோழமை கட்சியினரும், மாற்றுக் கட்சியினரும் கருத்துகளைக் கூறினால், அதை ஆராய்ந்து, அதற்கேற்ப பள்ளிக்கல்வித்துறை பணிகளை மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
கடந்த ஆண்டு அவசர கோலத்தில், கடைசி 2 மாதங்களில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளித்ததால், மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற முடியவில்லை என குறிப்பிட்ட அமைச்சர் செங்கோட்டையன், வரும் ஆண்டில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்தபட்சம் 500 பேர் மருத்துவப் படிப்புக்கு தேர்வு பெறுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். தற்போது 413 அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்களில், 26 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர் செங்கோட்டையன், வழக்குகளை முடித்துக் கொடுத்தால், ஒரே நாளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பத் தயார் என்றும் தெரிவித்தார்.
Post a Comment