ஆசிரியர் தகுதித் தேர்வின் ("டெட்') பாடத்திட்டம் மாற்றப்பட்டு, நிகழ் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தின்படி தேர்வை நடத்த பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி நாடு முழுவதும், ஆசிரியர் பணிக்கு "டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு அமலாகி உள்ளது. தேசிய கல்வியியல் ஆராய்ச்சிக் கவுன்சில் உத்தரவின்படி, தமிழகத்தில் இந்தத் தேர்வு கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது.
பள்ளி கல்வித் துறை சார்பில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2017 பிப்ரவரியில் தேர்வு நடத்தப்பட்டது.
இது குறித்து கல்வியாளர்கள் கூறுகையில், மாறிவரும் சூழலுக்கேற்ப தேர்வு முறையிலும் மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியமாகிறது. தற்போதைய சூழலில் பழைய பாடத்திட்டப்படி ஆசிரியர்களைத் தேர்வு செய்தால் பெற்றோர் கல்வி மீது கொண்டுள்ள எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வது கடினம். புதிய பாடத்திட்டத்தின்படி ஆசிரியர்களைத் தேர்வு செய்தால்தான் பணிக்கு வருவோர் சிறப்பாக பாடம் நடத்த முடியும் என்றனர்.
இதைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு, தமிழக அரசின் புதிய பாடத்திட்டப்படி, கேள்விகளைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி கல்வித் துறை இயக்குநர் தலைமையிலான குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.
Post a Comment