தர்மபுரி மாவட்ட அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கான, டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூட்டரங்கில், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான Editடெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம், கலெக்டர் மலர்விழி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, துணை இயக்குனர் (சுகாதாரம்) டாக்டர் ஜெகதீஸ்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனர் நாகலட்சுமி, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட மேற்பார்வை பொறியாளர் சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குளோரின் கலந்த குடிநீரை வழங்க வேண்டும். கழிப்பறைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
சம்மந்தப்பட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகளின் வாயிலாக கொசு மருந்து அடிக்க வேண்டும். பள்ளி வளாகங்களில் மழை நீர் தேங்காதவாறு தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை காலத்தில் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும். சுகாதாரம் மற்றும் தன் சுத்தம் குறித்து மாணவர்களிடையே விழப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாடுகளை அறவே தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் இணைப்புகள் இல்லாத பள்ளிகளுக்கு, உடனடியாக இணைப்புகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகளிடையே குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவது மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மேம்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் பள்ளிக்கு வருகை தராத மாணவிகளின் பெற்றோர்களுக்கு, உடனடியாக தகவல்களை தெரிவித்து அதற்கான காரணங்களை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றார்.