அரசுப்பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தம் நெல்லை மாவட்டத்தில் 70 பள்ளிகளுக்கு பாதிப்பு
தமிழகம் முழுவதும் 15 மாணவர்களுக்கும் குறைவாக மாணவர்கள் உள்ள 3 ஆயிரம் அரசுப்பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம் நிறுத்தப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
எஸ்.ஏ.பி. முழு சுகாதாரத் தமிழகம் என்ற திட்டத்தில் அரசுப்பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த மானியம் வழங்க இந்த ஆண்டு உத்தரவிடப்பட்டுள்ளது
15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளுக்கு மானியம் கிடையாது. 15–100 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு 25 ஆயிரம் ரூபாய், 101–250 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு 50 ஆயிரம் ரூபாய், 251–1000 மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்கு 75 ஆயிரம் ரூபாய், 1001க்கு மேல் மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாய் பராமரிப்பு மானியம் வழங்கப்படுகிறது
இத்தொகையை கழிப்பறைகள் சீரமைப்பு, குடிநீர் வசதி, குடிநீர்த் தொட்டி பழுது பார்த்தல், முட்புதர்களை அகற்றுதல், கல்வி, விளையாட்டு உபகரணங்களை வாங்குதல் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்கு செலவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலவு, பயன்பாட்டுச் சான்று அளிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது
மாணவர்கள் எண்ணிக்கை 15க்கு குறைவாக உள்ளதால் மாநிலம் முழுவதும் 3 ஆயிரம் பள்ளிகளுக்கு மானியம் வழங்கப்படவில்லை
இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்தப் பள்ளிகள் விரைவில்மூடப்பட்டு விடும் என தகவல் பரவி வருகிறது
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, மாவட்டச்செயலாளர் பால்ராஜ், தலைவர் ராஜ்குமார் கூறியதாவது
தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் அரசுப்பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம் விடுவிக்கப்படவில்லை
நெல்லை மாவட்டத்தில் 1,492 துவக்கப்பள்ளிகள், 419 நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 1,911 பள்ளிகள் உள்ளன. அவற்றில் 70 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 15 க்கும் குறைவான மாணவர்கள் உள்ளனர்
மானியம் விடுவிக்கப்படாத 3 ஆயிரம் பள்ளிகள் மூடப்படுமோ என கல்வியாளர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. மாணவர்கள் எண்ணிக்கையை காரணம் காட்டி 3 ஆயிரம் பள்ளிகளுக்கு நிறுத்தி வைத்த மானியத்தை உடனே வழங்க வேண்டும்
இவ்வாறு அவர்கள் கூறினர்
நெல்லை மாவட்டத்தில் 70க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தப்பட்டுள்ளதால் கிராமப்பகுதி மாணவ, மாணவிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது