Title of the document



நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக 4 கேள்விகளை கேட்டு அதற்கு சிபிஎஸ்இ தரப்பில் வரும் 6ம் தேதி பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.


 மார்க்சிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி.ேக.ரங்கராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘நீட் தேர்வை சுமார் 24 ஆயிரம் பேர் தமிழ் வழியில் எழுதினர். இதில் 49 வினா-விடைகள் தவறாக இருந்தன. இதனால் 196 மதிப்பெண் குறைவாக கிடைப்பதால், தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கு மருத்துவ சீட் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர்களின் நலன் கருதி தவறான 49 வினா-விடைகளுக்குரிய 196 மதிப்பெண்களை வழங்கவும், நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது எனவும் உத்தரவிட வேண்டும்,’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. அவகாசம் அளிப்பதாக கூறிய நீதிபதிகள் விசாரணையை ஜூலை 6க்கு தள்ளி வைத்தனர். மேலும், அன்றைய தினம் சிபிஎஸ்இ தரப்பில், அறிவியல் பாடத்திலுள்ள ஆங்கில வார்த்தைகளை மொழி மாற்றம் செய்தபோது சரியான தமிழ் வார்த்தையை கண்டறிந்து அவற்றை பயன்படுத்த என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டது, எத்தகைய நடைமுறை பின்பற்றப்படுகிறது?

அவ்வாறு முயற்சி மேற்கொள்ளப்பட்டால், அதற்குரிய அகராதி ஆங்கிலத்திற்கு சமமான தமிழை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதா?, அப்படி உருவாக்கியிருந்தால், தமிழ் வழியில் கற்பிக்கும் ஆசிரியர்களின் கவனத்திற்கு அது கொண்டு செல்லப்பட்டுள்ளதா?, உடல் உறுப்புகள், தாவரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து குறிப்பிட்ட ஆங்கில வார்த்தைகளை தமிழில் எப்படி உச்சரிப்பது என தமிழ் வழி மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ளதா? என்ற 4 கேள்விகளுக்கு பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post