சென்னை மாநகர காவல்துறையினருக்கு வாரத்தில் ஒருநாள் கட்டாய விடுமுறை கொடுக்க ஆணையர் விஸ்வநாதன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தினந்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்துவது, அரசியல் தலைவர்களுக்கும், அரசு அலுவலகர்களுக்கு பாதுகாப்பு அளித்தல், போராட்டங்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பது என வெளிமாவட்டங்களில் வேலை செய்யும் காவல் துறையினரைவிட சென்னை மாநகரத்தில் வேலை செய்யும் காவல் துறையினருக்குப் பணிச் சுமை அதிகமாக உள்ளதாக கருதப்படுகிறது. மேலும் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்க இரவு நேரங்களில் ரோந்துப் பணிகளிலும் ஈடுபட வேண்டியுள்ளதால் காவலர்களுக்கு பணிச்சுமையும், மன அழுத்தமும் ஏற்பட்டு காவலர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.
கடந்த மார்ச் மாதம் சென்னை மெரினாவில் மதுரையைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் அருண் ராஜ் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அடுத்த சில தினங்களில் அயனாவரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சதீஷ் காவல் நிலைய வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மேலும் பள்ளிக்கரணையைச் சேர்ந்த காவலர் ஒருவர் பணிச்சுமை காரணமாக வேலையை விட்டு விலகுவதாக ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.குற்றத்தைத் தடுத்து மக்களைப் பாதுகாக்கும் காவலர்களே தற்கொலை செய்துகொண்டால் காவல்துறை மீதுள்ள நம்பிக்கையை மக்கள் இழந்துவிடுவார்கள். எனவே, காவல் துறையினர் மன அழுத்தத்திலிருந்து விடுபட யோகா வகுப்புகள், உடற்பயிற்சி மற்றும் மருத்துவ ஆலோசனை வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த சென்னை மாநகர காவல் துறை ஆணையர் விஸ்வநாதன், காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் கட்டாய விடுப்பு கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் காவலர்கள் வட்டாரத்தில் செய்தி பரவி வருகிறது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment