Title of the document

 இரண்டாம் நிலை காவலர் பணிக்கு நடந்த, எழுத்து தேர்வின் முடிவுகள் வெளியிடப்படாதது, தேர்வர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தமிழக காவல் துறையில் காலியாக உள்ள, 6,140 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம், 2017 டிசம்பரில் அறிவிப்பு வெளியிட்டது.

அதிர்ச்சி : ஆன்லைன் வாயிலாக, 3.27 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு, மார்ச், 11ல், மாநிலம் முழுவதும், 232 மையங்களில் எழுத்து தேர்வு நடந்தது; 2.88 லட்சம் பேர் பங்கேற்றனர்.அவர்களுக்கு, இம்மாதம் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டு, மதிப்பெண்கள் அடிப்படையில், 1:5 என்ற, விகிதாச்சாரப்படி, உடல் தகுதி மற்றும் உடல் திறன் தேர்வுகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சீருடை பணியாளர் தேர்வு குழுமம், சமீபத்தில், மதிப்பெண் பட்டியலை மட்டும் வெளியிட்டது. ஆனால், உடல் தகுதி மற்றும், உடல் திறன் தேர்வுக்கு தேர்வானோர் பட்டியலை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருவது, தேர்வர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சட்ட விரோதம் : இதுகுறித்து, சீருடை பணியாளர் தேர்வு குழும அதிகாரிகள் கூறியதாவது:காவல் துறையில், இரண்டாம் நிலை காவலர் மற்றும், எஸ்.ஐ.,க்களை தேர்வு செய்யும் போது, பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற போலீசாரின் வாரிசுகளுக்கு, 9 சதவீதமும், பணியில் உள்ள, அமைச்சு பணியாளர்களின் வாரிசுகளுக்கு, 1 சதவீதமும் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.ஆனால், 'ஓய்வு பெற்ற போலீசாரின் வாரிசுகளுக்கு ஒதுக்கீடு வழங்குவது போல, ஓய்வு பெற்ற, அமைச்சு பணியாளர்களின் வாரிசுகளுக்கும் ஒதுக்கீடு வேண்டும்' எனக்கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கீடு வழங்குவது சட்ட விரோதம் என, தீர்ப்பு அளித்துள்ளது.அதனால், மார்ச், 11ல் நடத்தப்பட்ட, இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வு முடிவுகளை, வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்தால் தான், இந்த சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post