வரும் 2017 ஜனவரி 22ம் தேதி நெட்’ தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கான முழு விவரங்கள் இன்று சிபிஎஸ்இ இணையளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மொழி மற்றும் கலைப்பிரிவு பாடங்களில் உதவி பேராசிரியர் பணிக்கான ’நெட்’ தகுதித்தேர்வை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தி வருகிறது. இத்தேர்வு ஆண்டுக்கு 2 தடவை (ஜுன், டிசம்பர்) நடத்தப்படும். கடந்த தேர்வு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டது. இந்நிலையில் 2016-ம் ஆண்டுக்கான 2-வது தேர்வு டிசம்பர் மாதத்துக்குப் பதில் சற்று தாமதமாக ஜனவரி மாதம் 22-ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக முழு விவரம் அக்டோபர் 15ம் தேதி வெளியிடப்படும் என்று கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ‘உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி மாணவர் தகுதிக்கான தேர்வு’ தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு யுஜிசி இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ‘2017 ஜனவரி ‘நெட்’ தேர்வுக்கு தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், சமூகவியல், உளவியல், பொது நிர்வாகம், பொது நிர்வாகம், வணிகவியல், சட்டம், இதழியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றவர்களும், தற்போது இறுதி ஆண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் மூலம் மட்டுமே தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். ஆன்லைன் (www.cbsenet.nic.in) பதிவு அக்டோபர் 17-ம் தேதி தொடங்கி நவம்பர் 16-ல் முடிவடைகிறது. இதற்கான தேர்வுக்கட்டணம் பொதுப்பிரிவினருக்கு 600 ரூபாய், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 300 ரூபாய், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 150 ரூபாய். விண்ணப்பங்களில் திருத்தங்களை நவம்பர் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை மேற்கொள்ளலாம். டிசம்பர் 21ம் தேதி தேர்வுக்கான அனுமதி அட்டை பதிவேற்றப்படுகிறது. நெட் தேர்வு வரும் 2017ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும். மொத்தம் 85 பாடங்களுக்கு நாடு முழுவதும் 90 நகரங்களில் தேர்வு நடைபெறுகிறது. முழு விவரங்களை http://cbsenet.nic.in என்ற இணையதளத்தில் அறியலாம்.
Post a Comment