Title of the document
காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ், செயல்பட்டு வரும் பள்ளி சத்துணவு மையங்களில் 159 சத்துணவு அமைப்பாளர் மற்றும் 127 சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. காலிப் பணியிடங்களுக்கு தகுதியுடைய பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மனுக்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி, அக்டோபர் 10 முதல் நவம்பர் 1-ஆம் தேதி வரை அலுவலக வேலை நாள்களில் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய, நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். மேலும் http://kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் அளிக்கப்படவோ, பெறப்படவோ மாட்டாது. காலிப் பணியிடங்கள் இனசுழற்சி முறையில் நிரப்பப்படும்.
அரசு நிதி உதவி பெறும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு இனசுழற்சி முறை பின்பற்றப்படமாட்டாது. சத்துணவு அமைப்பாளர் பணிக்கு, பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நிகழாண்டு ஜூலை 1 அன்று 21 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்கவேண்டும்.
பழங்குடி இனத்தைச் சேர்ந்தவராக இருந்தால் 8-ஆம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி அடைந்தவராக இருத்தல் வேண்டும். நிகழாண்டு ஜூலை 1 அன்று 21 வயது பூர்த்தி அடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தி அடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பணியிடத்துக்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்புக்கும் இடையே உள்ள தொலைவு 3 கி.மீ.க்குள் இருக்கவேண்டும்
சமையல் உதவியாளர் பணி: பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி, நிகழாண்டு ஜூலை 1 அன்று 21 வயது பூர்த்தி அடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராக வும் இருக்க வேண்டும். பழங்குடி இனத்தைச் சேர்ந்தவராக இருந்தால் எழுதப் படிக்கத் தெரிந்தவராகவும், நிகழாண்டு ஜூலை 1 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தி அடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்கவேண்டும்.
அதுபோல், 3 கி.மீ.க்குள் குடியிருப்பு இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மனுதாரரின் புகைப்படம், கல்விச் சான்று, பள்ளி மாற்றுச் சான்று, ஜாதி, இருப்பிடம், வருமானச் சான்று, குடும்ப அட்டை, விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர் எனில் அதற்கான வட்டாட்சியர் சான்று, இதர முன்னுரிமைச் சான்று இணைப்புகளுடன் நவம்பர் 1-ஆம் தேதி வரை அலுவலக வேலை நாள்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு விண்ணப்பங்கள் வழங்கப்படவோ, பெறப்படவோ மாட்டாது.
சத்துணவு அமைப்பாளர் பணிக்கு ரூ. 7,700 - 24,200 மற்றும் சமையல் உதவியாளர் பணிக்கு ரூ. 3,000 - 9000 என்ற ஊதிய விகிதத்தின்கீழ் ஊதியம் வழங்கப்படும். சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கான இனசுழற்சி குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய, நகராட்சி அலுவலகங்களில் தெரிந்து கொள்ளலாம். நவம்பர் 1-ஆம் தேதி மாலை 5.45 மணி வரை பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே உரிய பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். தகுதிவாய்ந்த மனுதாரர்களுக்கு மட்டும் நேர்முக தேர்வுக்கான அழைப்பாணை அனுப்பப்படும் என ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post