தனியார் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பாடத்தை நடத்தாமல் பன்னிரண்டாம் வகுப்பு பாடத்தை மட்டுமே நடத்தி மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள். இந்த மாணவர்களே அரசு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்கின்றனர் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்து வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, கடந்த ஆண்டு, பதினொன்றாம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு என்பது அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், இரண்டு ஆண்டுகளிலும் சேர்த்து படித்தால் மட்டுமே தேசிய அளவில் இடம்பிடிக்க முடியும் என்பதால் 11-ம் வகுப்பில் 600 மதிப்பெண் மற்றும் 12-ம் வகுப்பில் 600 மதிப்பெண்கள் என இரண்டும் சேர்த்து மதிப்பெண் சான்றிதழ் வழங்கவும் முடிவெடுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
இதனடிப்படையில், பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதி இருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று (15.09.2018) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 'மாணவர்களுக்கு மன அழுத்தம் போக்கும் வகையில் பிளஸ் டூ வகுப்பில் பெறப்படும் 600 மதிப்பெண் மட்டுமே உயர்கல்விக்கு எடுத்துக்கொள்ளப்படும்” என்று அறிவித்திருக்கிறார். 'இதற்காக, ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும்” அமைச்சர் தெரிவித்துள்ளார்.