புதுக்கோட்டை திருக்கோகர்ணம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசிரியரராக பணியாற்றி வந்தவர் பாக்கியம். இவரது மகன் பன்னீர்செல்வம் இதே பள்ளியில் 5ம் வகுப்பு வரை படித்தார். இந்நிலையில் தற்போது உயர்கல்வி முடித்துவிட்டு குவைத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த தனது தாயார் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பணி காலத்திலேயே இறந்து விட்டார். தனது தாயாரின் நினைவாகவும், பள்ளியின் முன்னாள் மாணவர் என்ற முறையிலும் பள்ளிக்கு உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் தனது தாயாரின் நினைவாக ரூ.2 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் கிளாஸ் ஒன்றை அமைத்து கொடுத்து உள்ளார்.
இந்த ஸ்மார்ட் வகுப்பறை முற்றிலும் ஏசி வசதி கொண்டதாகவும், எல்.சி.டி பிரஜக்டர் லேப்டாப் போன்றவையுடன் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட் வகுப்பறைகள் நேற்று தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து பன்னீர்செல்வம் கூறுகையில் தான் படித்த பள்ளி மட்டுமல்லாமல் தனது தாயார் பணியாற்றிய பள்ளி தமிழகத்தின் முன்னோடி பள்ளியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தற்போது ஸ்மார்ட் வகுப்பறையை இந்த பள்ளிக்கு அளித்து உள்ளேன் என்றார்