Title of the document
கடந்த 2017ல் நடந்த அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் பணிக்கான தேர்வுக்கு முன், முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்து வரும் 20ம் தேதி நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்யும்படி, முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்து வரும் மத்திய குற்றப் பிரிவு புலன் விசாரணை அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 கடந்த 2017ம் ஆண்டு தமிழகம் முழுவதும் அரசு பாலிடெக்னிக்களில் ஆயிரத்து 58 விரிவுரையாளர்கள் பணிக்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது.

இதில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்ததை அடுத்து, தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அரசின் முடிவால் நேர்மையாக தேர்வு எழுதிய மாணவர்களும் பாதிக்கப்படுவர் என்பதால், தேர்வை ரத்து செய்யக் கூடாது என அரசுக்கு உத்தரவிடக் கோரியும், மோசடியில் ஈடுபட்டவர்களை தனியாக பிரித்து அவர்களின் தேர்வை மட்டும் ரத்து செய்யக்கோரியும் விண்ணப்பதாரர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

 தனியார் நிறுவனம் மூலம் தேர்வு நடத்தப்பட்டதாகவும், அந்த நிறுவனம் விடைத்தாள்களில் திருத்தம் செய்துள்ளதாகவும், பண பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் கூறி, அரசின் உத்தரவை உறுதி செய்து, சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து விண்ணப்பதாரர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, கடந்த 2017ல் நடந்த இந்த மோசடி வழக்கை விசாரித்து வரும் மத்திய குற்றப் பிரிவு புலன் விசாரணை அதிகாரியை வரும் 20ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இதுவரை நடந்த விசாரணையில், விரிவுரையாளர்கள் பணிக்கான தேர்வுக்கு முன்பே முறைகேடுகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post