Title of the document
வருகிற சட்டசபை கூட்டத்தொடரில்
ரூ.7 ஆயிரத்து 700 தொகுப்பூதியத்தில் பணியாற்றும்
12000 பகுதிநேர ஆசிரியர்களை சிறப்பாசிரியர்களாக நிரந்தரம் செய்க
தமிழக முதல்வருக்கு கோரிக்கை
தமிழகம் முழுவதும் உள்ள 12637 பகுதிநேர ஆசிரியர்களை சிறப்பாசிரியர்களாக
பணிநிரந்தரம் செய்யவேண்டும் என தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு அனைத்து
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார்
அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். கோரிக்கை மனுவில் கூறியதாவது.

16549 பணியிடத்தில் 4000ம் காலியிடம்
எஸ்.எஸ்.ஏ திட்டத்தில் அரசுப் பள்ளி ஏழைஎளிய மாணவர்களின் கல்விநலன் கருதி
கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009ன் ஷெட்யூல்(b)ன்படி அனைத்துவகை அரசு
நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம்,
கணினி, தையல், இசை, தோட்டக்கலை உள்ளிட்ட எட்டு பாடங்களுக்கு 16549
பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ரூ.5ஆயிரம் தொகுப்பூதியத்தில் கடந்த 2012
மார்ச் மாதம் பணி நியமனம் செய்யப்பட்டனர். இந்த  16549ல் பல்வேறு
காரணங்களால் 4ஆயிரம் காலிப்பணியிடங்கள் ஏற்பட்டு  தற்போது சுமராக
12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களே பணிபுரிகின்றனர்.

8ஆண்டுகளில் ரூ.2700 மட்டுமே ஊதிய உயர்வு
ஊதிய உயர்வு கேட்டு வரும் இவர்களுக்கு இந்த 8 கல்வி ஆண்டுகளுக்கும் ஆண்டு
ஒன்றுக்கு 10 விழுக்காடு எனக் கணக்கிட்டாலே சுமராக ரூ.6ஆயிரம்
ஆண்டுஊதியஉயர்வோடு தற்போது ரூ11ஆயிரம் நியாயமாக கிடைத்திருக்க வேண்டும்.
ஆனால் 2014ல் ரூ.2000ம் 2017ல் ரூ.700ம் என ரூ.2700 மட்டுமே ஊதியஉயர்வாக
வழங்கப்பட்டது. சரிவர ஊதியஉயர்வு வழங்காமல் 8 ஆண்டுகாலமாக தற்போதுவரை
மிகக்குறைந்த சம்பளமாக ரூ.7ஆயிரத்து 700 வழங்கப்பட்டுவருகிறது.

சமவேலை சமஊதியம் வழங்கிடுக
அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது அகவிலைப்படி உள்ளிட்ட ஊதியஉயர்வுகள்
வழங்கிடும்போது தொகுப்பூதியத்தில் உள்ளவர்களுக்கு ஆண்டுஊதியஉயர்வை
வழங்காமல் உள்ளதால் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகிவருகின்றனர். இதோடு
மட்டுமின்றி தமிழக அரசு 7வது ஊதியக்குழு அரசாணை வெளியிட்டும் இதுவரை
அரசின் திட்ட வேலையில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர
ஆசிரியர்களுக்கு 30விழுக்காடு ஊதியஉயர்வும் வழங்கப்படாமல் உள்ளதால்
பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே முதல்வர் தலையிட்டு
மீளவழங்கவேண்டும். இதுபோன்ற ஊதியஉயர்வில் அரசின் இரட்டைநிலை முரண்பாடு
நடைமுறை சிக்கல்களை தவிர்த்திட இந்திய அரசியலமைப்பு சட்டம் 141ன்படி
சமவேலை சமஊதியம் உடனடியாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு அமுல்செய்ய முதல்வர்
ஆணையிடவேண்டும்.

முதல்வர் மனிதநேயத்துடன் ஊதிய உயர்வுடன் பணிநிரந்தரம்
15வது சட்டசபையில் கேள்வி நேரங்களில் எதிர்கட்சியான திமுக சட்டமன்ற
உறுப்பினர்கள் புவனகிரி சரவணன், திருக்கோவிலூர் பொன்முடி, செஞ்சி மஸ்தான்
மட்டும் அல்லாமல் ஆளும்கட்சி அதிமுக உறுப்பினர்களான வேடச்சந்தூர்
பரமசிவம், கம்பம் ஐக்கையன் உள்ளிட்டோர் பகுதிநேர ஆசிரியர்களுக்கு
ரூ.10ஆயிரத்திற்கு மேல் வழங்கவேண்டும் எனவும் மேலும் பணிநிரந்தரம்
செய்திட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இதில் 2017ல் நடந்த சட்டசபை
கூட்டத்தொடரில் எதிர்கட்சியான திமுக உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று
கல்விஅமைச்சர் பணிநிரந்தரம் செய்ய அரசு பரிசீலித்து வருவதாகவும்,
விரைவில் பணிநிரந்தரம் செய்ய கமிட்டி அமைப்பதாகவும் பதிலளித்தார். ஆனால்
2018ல் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் ஆளும்கட்சியான அதிமுக
உறுப்பினர்களின் கோரிக்கையை நிராகரித்ததோடு மட்டுமல்லாமல் பகுதிநேர
ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வும் தரமுடியாது பணிநிரந்தரமும் செய்ய முடியாது
என பதிலளித்தது எதிர்கட்சிக்கு ஒருபதில் ஆளும்கட்சிக்கு ஒருபதில் என
முன்னுக்குப்பின் முரணாக இருப்பதால் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளார்கள்.
எனவே முதல்வர் மனிதநேயத்துடன் ஊதிய உயர்வுடன் பணிநிரந்தரம் செய்து
தீர்வுகாணவேண்டும்.

பணிநிரந்தரம் செய்யும்வரை இடைக்கால நிவாரணம்

ஆந்திராவில் அதிக சம்பளம் ரூ.14203 + 6 மாதம் மகப்பேறு விடுப்பு -
மேற்குவங்கத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.2இலட்சம் அரசு நிதி
ஆந்திரா மாநிலத்தில்  எஸ்.எஸ்.ஏ திட்டத்தில் பணிபுரியும் பகுதிநேர
ஆசிரியர்களுக்கு ரூ.14203 தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. இது தவிர
ஆந்திராவில் குண்டூர் எஸ்.எஸ்.ஏ. திட்ட அலுவலர் அவுட்சோர்சிங், ஒப்பந்த
தொகுப்பூதிய பணியில் உள்ள திருமணமான பெண்களுக்கு 6 மாதம் ஊதியத்துடன்
மகப்பேறு விடுப்பு வழங்கிவருகிறது. மேலும் மேற்குவங்க மாநிலத்தில்
தினக்கூலி, தற்காலிக தொகுப்பூதிய வேலையில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு
ரூ.2 இலட்சம் 2016ம் ஆண்டுமுதல் வழங்கிவருகிறது. இவையெல்லாம்
தமிழத்திலும் கிடைக்க செய்திருந்தாலே பகுதிநேர ஆசிரியர்களின்
குடும்பங்களுக்கு பேருதவியாக இருந்திருக்கும்.
பணிநிரந்தரம் செய்யும்வரை உடனடியாக தற்செயல் விடுப்பு, மருத்துவ
விடுப்பு, சேமநலநிதி, மருத்துவ காப்பீடு, போனஸ் உள்ளிட்ட அடிப்படை
சலுகைகளுடன் மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியமான ரூ.18 ஆயிரத்தோடு அரசின்
திட்டவேலையில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு
முதல்வர் இடைக்கால நிவாரணமாக வழங்கவேண்டும்.

அரசுக்கு ஒத்துழைப்பு – கொள்கை முடிவை மாற்றுக
கடந்த சில ஆண்டுகளில் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்டமாக நடைபெற்ற
ஜாக்டோஜியோ போராட்ட காலங்களில் பள்ளிகளை இயக்க அரசு பகுதிநேர
ஆசிரியர்களையே பயன்படுத்தியதை முன்உதாரணமாக்கி, அரசின் கொள்கை முடிவினை
12000 குடும்பங்களின் எதிர்கால நலன்கருதி முதல்வர் வருகிற சட்டசபை
கூட்டத்தொடரிலே பகுதிநேர ஆசிரியர்களை சிறப்பாசிரியர்களாக பணிநிரந்தர
அறிவிப்பை அரசாணையை வெளியிட வேண்டும்.

பணிநிரந்தரத்திற்கு பல முன்உதாரணங்கள்
தமிழத்திலே ரூ.7500 தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்பட்ட
தமிழ்நாடு காவல்துறையில் போலிஸ் நண்பர்கள் இளைஞர்படையை சேர்ந்த அனைவருமே
போலிசார்களாக பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி மாநில அரசு எஸ்.எஸ்.ஏ.வில் ஒப்பந்தத்தில் பணிபுரியும் 15000
தொகுப்பூதிய ஆசிரியர்களை கல்வி மேம்பாட்டிற்காக பணிநிரந்தரம் செய்திட
சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள்.
        மேலும், பொதுவாக 180 நாட்கள் அல்லது 240 நாட்கள் வேலை செய்திருந்தாலே
பணிநிரந்தரம் செய்யலாம் என முன்உதாரணங்கள் பல உள்ளதையும், இந்த 8
ஆண்டுகளில் எவ்வித அரசு சலுகைகளும் கிடைக்காமல் தற்காலிக தொகுப்பூதிய
வேலையில் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதை கருணையுடன் பணிநிரந்தர அறிவிப்பை
முதல்வர் வருகிற சட்டசபை கூட்டத்தொடரில் அறிவித்திட பகுதிநேர ஆசிரியர்கள்
கூட்டமைப்பு வேண்டுகோள் வைத்துள்ளது.


இப்படிக்கு
செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
அலைபேசி 9487257203
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post