Title of the document
ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ள போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 12
லட்சம் ஆசிரியர் பங்கேற்பார்கள் என்று ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. தமிழக
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் தாஸ் தலைமையில்
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் அவசர செயல்
கூட்டம் நடந்தது. 22ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைபெறும்
ஜாக்ட்டோ-ஜியோ போராட்டத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 100
சதவீதம் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்துக்கு பின் ஜாக்டோ ஜியோ நிர்வாகி தாஸ் கூறியதாவது: தொடக்க பள்ளியை
இணைக்கும் திட்டத்தை அரசு உடனடியாக கை விட வேண்டும். அனைத்து பள்ளிகளிலும்
உடற்கல்வி ஆசிரியர், சுற்றுசூழல் கல்வி ஆசிரியர் மற்றும் இரவு நேர
காவலாளிகள் பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜன. 22ம் தேதி நடைபெற உள்ள போராட்டத்தில் 100 சதவீதம் பேர் பங்கு
கொள்வார்கள் என்பதால் அனைத்து பள்ளிகளும் மூடும் சூழ்நிலை ஏற்படும். தமிழக
ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஒன்றரை லட்சம் பேர் உள்பட தமிழகம் முழுவதும் 12
லட்சம் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். 18ம் தேதி
அங்கன்வாடி பணி ஆணையை வாங்க மறுப்பு தெரிவித்து இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட
தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர்
கூறினார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment