Title of the document

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 133 இளநிலை உதவியாளர், தட்டச்சர்களுக்கு நியமன கடிதம் வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதாகவும், பல மணி நேரம் காத்திருக்க வைப்பதாக தேர்வானர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தமிழக பொதுப்பணித்துறையில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், உதவியாளர், கண்காணிப்பாளர், நிர்வாக அலுவலர் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
இதில், இளநிலை உதவியாளர், தட்டச்சர்களாக பணிபுரிந்து வந்த பலர் பதவி உயர்வில் சென்று விட்டனர். இதனால், பொதுப்பணித்துறையில் 1,200க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது. தற்போது அன்றாட பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அந்த பணியிடங்களை நிரப்பும் வகையில் டிஎன்பிஎஸ்சிக்கு தேர்வு நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது. இதே போன்று பல்வேறு அரசு துறைகள் சார்பில் டிஎன்பிஎஸ்சிக்கு கடிதம் எழுதியது. 
இதை தொடர்ந்து, தமிழ்நாடு பணியாளர் தேர்வாணயம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குரூப் 4 தேர்வு நடத்தி,அதன் முடிவை வெளியிட்டது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இந்த பணி ஆணை பெற்றவர்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு நேரில் பணி ஆணையை காட்டி நியமனம் கடிதம் பெற்றால் தான் பணியில் சேர முடியும். இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சியால் தேர்வு செய்யப்பட்ட 133 பேர் பொதுப்பணித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை இணை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் நியமனம் கடிதம் பெறுவதற்கு நேற்று வந்தனர். காலை 10 மணிக்கு வந்த அவர்களை பிற்பகல் 1 மணி வரை அதிகாரி சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவர்கள் பல மணி நேரம் அலுவலக வாசலில் காத்திருந்தனர். ஆனால், அவர்களில் பலரை வேறொரு நாளில் வருமாறு அனுப்பி விட்டதாக தெரிகிறது. 
இதனால், நியமன கடிதம் பெற வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பணி நியமனம் கடிதம் வழங்க லஞ்சம் பெறுவதற்காக இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றனரா என்ற சந்தேகம் எழுந்திருப்பதாகவும் மாணவர்கள தெரிவித்தனர். இது குறித்து டிஎன்பிஎஸ்சியில் தேர்ச்சி பெற்றவர்கள் கூறும் போது,‘டிஎன்பிஎஸ்சியில் பணி ஆணையை உடனே வழங்கி விட்டனர். ஆனால், பொதுப்பணித்துறையில் தான் பல மணி நேரம் காக்க வைத்தனர். எதற்காக, இப்படி செய்கின்றனர் என்று தெரியவில்லை . எங்களில் பலர் வெளியூரில் இருந்து நியமன கடிதம் பெற சென்னை வந்துள்ளோம். ஆனால், உடனே நியமன கடிதம் வழங்காமல் எங்களை  அலைகழிப்பது எந்த வகையில் நியாயம். நாங்கள் இந்த துறையில் தான் பணிக்கு வந்திருக்கிறோம் என்று கூட அவர்கள் கருணை காட்டவில்லை’ என்றனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post