அண்ணா பல்கலைக் கழக பிஇ பட்டப் படிப்பு தேர்வுக்கான கேள்வித்தாள் வெளியானதாக தகவல் பரவியதை அடுத்து மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதில் இணைப்பு பெற்றுள்ள சுமார் 400 பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் 8 லட்சம் மாணவ மாணவியர் பொறியியல் படித்து வருகின்றனர். அதில் நான்கு ஆண்டுகளுக்கான பருவத் தேர்வுகள் கடந்த 20 நாட்களாக நடக்கிறது. குறிப்பாக 384 கல்லூரிகளில் படிக்கும் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு தற்போது இரண்டாம் பருவத் தேர்வுகள் நடக்கிறது. அதில் கணக்கு பாடத்தின் தேர்வுக்கான கேள்வித்தாள் நேற்று கசிந்ததாக கூறப்படுகிறது. இது மாணவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் கணக்குப் பாடத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக அண்ணா பல்கலைக் கழக தேர்வுகளை பொறுத்தவரையில், அனைத்து தேர்வுகளும் துணைவேந்தர் மற்றும், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் தான் பொறுப்பு. அவர்கள் தவிர மற்றவர்களுக்கு கேள்வித்தாள் தொடர்பான எந்த விவரங்களும் தெரிய வாய்ப்பில்லை. மேலும், தேர்வுக்கான கேள்வித்தாள்கள் அப்போதைக்கு அப்போது ஆன்லைன் மூலம் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக் கழகம் அனுப்பி வைக்கும். அந்த வழக்கப்படி முதலாம் ஆண்டு கணக்கு கேள்வித்தாள் அனுப்பியதில் தனியார் கல்லூரி ஒன்றின் மூலம் கேள்வித்தாள் ெவளியில் கசிந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அண்ணா பல்கலைக் கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியிடம் கேட்டபோது, இது குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாகவும், கேள்வித்தாள் கசிவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்றும் ஆய்வு செய்து வருகிறோம் என்று தெரிவித்தார். கேள்வித்தாள் வெளியான தகவல் நேற்று பரவியதை அடுத்து தேர்வுத்துறையின் அதிகாரிகள், பணியாளர்கள் அனைவரும் நேற்று இரவு வரை பல்கலைக் கழகத்தில் இருந்தனர். இந்த சம்பவத்தால் பேராசிரியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், மேற்கண்ட கணக்குத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment