நான்கு ஆண்டுகளாக மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியர்களுக்கு பதவிஉயர்வு கலந்தாய்வு நடத்தபடாததால் விரக்தியில் உள்ளனர்.தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் நீலகண்ட பூபதி கூறியதாவது:தமிழகத்தில் 2,488 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. பள்ளிகளுக்கு கலைப்பிரிவை அடிப்படையாக கொண்டு 9 ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மற்ற பிரிவு ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி வரும் நிலையில் நான்கு ஆண்டுகளாக வரலாற்று ஆசிரியர்களுக்கான முதுநிலை ஆசிரியர் பணியிடம் பதவி உயர்வின் மூலம் நிரப்பப்படவில்லை.
இதனால் பதவி உயர்வு இல்லாமலே நுற்றுக்கணக்கான வரலாற்று ஆசிரியர்கள் பணி ஓய்வு பெறுகிறார்கள். ஆண்டுதோறும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின் மூலம் 50 சதவீதமும், நேரடி நியமனத்தின் மூலம் 50 சதவீதமும் முதுகலை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட்டு வருகிறது.
அரசு சார்பில் 1:3 என்ற விகிதப்படி முதுகலை ஆசிரியர் பணியிடம் நிரப்பட்டு வந்த நிலையில், சில ஆசிரியர்கள் விகிதாச்சாரத்தை மாற்றி அமைக்க கோரி நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். பள்ளிக்கல்வி துறை சார்பில் 1:1 என்ற விகிதத்தில் பதவி உயர்வு வழங்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுாற்றுக்கும் மேற்ப்பட்ட பள்ளிகளில் வரலாற்று ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக அரசுப்பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் கலைப்பிரிவுக்கு முக்கியத்துவம் அளித்துவரும் நிலையில், தமிழக அரசு வரலாற்று ஆசிரியர்களை நியமிக்க விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும்,என்றார்.
Post a Comment