மதிப்புமிகு ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அண்ணன் அவர்களின் இன்றைய (28.12.2018)பதிவு
***************************
உயிர் நீர் அருந்தா உண்ணாவிரதப் போராட்டம்
**************************
ஊதிய மீட்புக் குழுவின் சார்பில் சமவேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் 23.12.2018 முதல் உணர்வு மிகுந்த உயிர் நீர் அருந்தா போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். தமிழக ஆசிரியர் கூட்டணி இயக்க இதழான ஆசிரியர் இயக்க குரல் 20.12.2018 அன்று வெளிவந்த இதழில் இடைநிலை ஆசிரியருக்கான அறைகூவல் வெளியிடப்பட்டிருந்த செய்தியினை அப்படியே பதிவிடுகிறோம்.
( சமச்சீர் கல்வி கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியருக்கு சமச்சீர் ஊதியமில்லை!!
தமிழகத்தில் ஒரு மாத கால வித்தியாசத்தில் நியமனமானவர்களுக்குள் மாத ஊதிய வேறுபாடு பதினைந்தாயிரம் ரூபாய்
பாதிக்கப்பட்டவர்களின் நெஞ்சம் பதறுகிறது தமிழக அரசே தீர்வு காண வேண்டாமா!!
சங்க வித்தியாசமின்றி கவலைக் கோடுகள் நிறைந்த அவர்களின் முகங்களை காணுங்கள் !!
போராட்டக்களம் சிவந்தமண்ணாக மாற வேண்டும்!!
கரம் கோர்த்து களத்தில் தொடருவோம் !! )
இப்படி நாங்கள் முகநூலிலும், இயக்க இதழிலும் நாங்கள் பதிவிட்டுள்ளதை நாடு அறியும். 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இயக்க இதழ்கள் மாண்புமிகு முதலமைச்சர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உட்பட அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்,ஒருநபர்க் குழுத்தலைவர் நிதித்துறை செயலாளர் செலவினம் திரு.சித்திக் அவர்களுக்கும், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கும், கல்வித்துறை இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் ஆகியோர்களுக்கும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.மேலும் சட்ட மன்ற எதிர்கட்சித் தலைவர் திமுக தலைவர் மதிப்புமிகு திரு.ஸ்டாலின் அவர்கள் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 1.6.2009 க்குப் பின்னர் நியமனமான இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் எங்கள் குடும்பத்துப் பிள்ளைகள் அவர்களின் கண்களில் கண்ணீருக்கு பதில் ரத்தம் கசிவதை எங்களால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை.
இந்த நிலைமையில் ஐபெட்டோ அண்ணாமலை ஐயா அவர்கள் கல்வி அமைச்சர் அவர்களைப் பார்த்து இவர்களுக்கு இந்த ஊதியத்தை தரக்கூடாது என்று நாங்கள் வலியுறுத்தியதாக செய்தியினை முகநூலிலும்(Facebook), புலனத்திலும்(Whats up) வெளியிட்டுள்ளார்கள். நாங்கள் அதற்காக கோபப்படவில்லை காரணம் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்பதை விட தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்குள் இருவேறுபட்ட ஊதியமா? என்பதை அறிவித்து தொடர்ந்து போராடி வருகிற இயக்க இதழில் எழுதி வருகிற இயக்கம் தமிழக ஆசிரியர் கூட்டணி ஆகும். என்றும் அந்த ஒற்றை கோரிக்கையில் உறுதியாக இருப்போம் எங்கள் இயக்கமும் உறுதியாக இருக்கும். ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பும் உறுதியாக இருக்கிறது.
களத்தில் நின்று போராடுகிற உங்களுடைய கோபம் தமிழக அரசின் மீது ஏற்பட வேண்டுமே தவிர ஜாக்டோ ஜியோ மீது வர வேண்டிய அவசியம் இல்லை அது பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் இணைந்த கூட்டமைப்பு ஒரு பாதுகாப்பு அரணாகும். வெறுப்புணர்வை தவிர்த்துக் கொள்ளுங்கள்
உங்களுடன் தமிழக ஆசிரியர் கூட்டணியும், ஜாக்டோ ஜியோ அமைப்பும் என்றும் இணைந்து நிற்கும் என்பதை இதய உணர்வுடன் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். உங்கள் ஒற்றை கோரிக்கை வெற்றி பெற களத்தில் நிற்போம்
வாழ்த்துகளுடன்
வா.அண்ணாமலை
ஐபெட்டோ அகில இந்திய செயலாளர்.
Post a Comment