ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர், காப்பாளர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அரூரில் தமிழ்நாடு ஆசிரியர், காப்பாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம், மாநிலத் தலைவர் சி.தீத்தான் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் உள்ள பள்ளி ஆசிரியர்கள், சமையலர்கள், துப்புரவுப் பணியாளர்கள், இரவு காவலர்கள் உள்ளிட்ட அனைத்து காலி பணியிடங்களையும் விரைந்து நிரப்ப வேண்டும். அரசுப் பணியில் தொகுப்பூதியம், மதிப்பூதிய முறைகளை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். தொகுப்பூதிய முறையில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்கள், சமையலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
அனைத்து மாவட்டங்களிலும் பணியாளர்கள், ஆசிரியர்களின் பதவி உயர்வுகளில் நிலவும் சீரற்ற தன்மைகளை முறைப்படுத்த வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் இயங்கும் அரசுப் பள்ளிகள், விடுதிகளுக்கு தேவையான கட்டடம், குடிநீர், கழிப்பிடங்கள், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தனி வட்டாட்சியர் அலுவலகப் பணிகளை சீரமைக்க வேண்டும்என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், சங்க மாநில பொதுச் செயலர் ஞா.விவேக், மாநில பொருளாளர் ரா.ஆசைத்தம்பி, மாநில துணை செயலர் பொ.வெங்கடாசலம், மாநில அமைப்புச் செயலர் சி.பாலமுருகன், மாநில மகளிரணி செயலர் எம்.ரேவதி, மாநில சங்க ஆலோசகர் எம்.ராஜி, மாவட்டத் தலைவர் மு.சங்கர், மாவட்ட செயலர் ரா.மாதேஷ், மாவட்டப் பொருளாளர் ஜி.சிவசக்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Post a Comment