Title of the document

கோரிக்கைகளை ஜனவரி 7- ஆம் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால் அடுத்தநாள் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஈடுபடுவார்கள் என அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.
திருவாரூரில், ஜாக்டோ - ஜியோ அமைப்பின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் உயர்நீதிமன்றம் நிகழ்வுகள் விளக்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.ஈவேரா, வி.சோமசுந்தரம், எஸ்.துரைராஜ், பெ.ரா.ரவி, ஆர்.சத்தியமூர்த்தி, சிவகுரு ஆகியோர் தலைமை வகித்தனர்.
கூட்டத்தில் ஜாக்டோ - ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் பங்கேற்றுப் பேசினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
நீதிமன்றத்தில் தமிழக தலைமைச் செயலர் அளித்த உறுதிமொழியை அரசு செயல்படுத்தவில்லை என்பதால் அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கடந்த மாதம் நீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் அவகாசம் கேட்டதற்கு நீதிபதி மறுத்து, ஜனவரி  7-ஆம் தேதிக்குள் தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, நீதிபதி கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் ஜனவரி  7-ஆம் தேதி வரை ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஜனவரி  7-ஆம் தேதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அன்றைய தினமே காலை வரையற்ற போராட்டத்தின் அறிவிப்பை வெளியிடுவோம் என்றார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post