Title of the document


திருக்குறள்


அதிகாரம்: நடுவு நிலைமை

திருக்குறள்:111

தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்.

விளக்கம்:

பகைவர், நண்பர், அயலார் என்னும் பிரிவினர் தோறும் நீதி தவறாது பின்பற்றப்படுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறம் மட்டுமே வாழ்க்கைக்குப் போதும்.

 பழமொழி

Stitch in time and save nine

பருவத்தே பயிர் செய்

இரண்டொழுக்க பண்புகள்





1. இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாத்து என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.

2. மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமாக உபயோகிப்பேன்

 பொன்மொழி

பெண்களின் பங்களிப்பு இல்லாமல் வீட்டில் நல்ல வளர்ச்சியோ, மாற்றமோ உண்டாகாது.

   - பாரதியார்

பொதுஅறிவு

1. ராமன் மகசேசே விருது பெற்ற முதல் இந்தியர் யார்?

 ஆச்சாரியா வினோபா பாவே

2. இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் யார்?

 சரோஜினி நாயுடு

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

பப்பாளி பழம்


1. பப்பாளி பழத்தை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்தால், உடல் வளர்ச்சி விரைவாக இருக்கும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

2. பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும்.

3. பப்பாளிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குறையும் வாய்ப்பு உள்ளது.

4. பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வந்தால், நரம்புத் தளர்ச்சி நோய் விரைவில் குணமாகும்.

English words and meaning

Quad.  ----  முற்றம்
Quaint.---- விந்தையான
Quadruple
நான்கு மடங்கு
Qualm. மயக்கம் ,மனசாட்சி
Quotient----- ஈவு





அறிவியல் விந்தைகள்

* குழந்தைகளின் உடலில் பெரியவர்கள் உடலில் இருப்பதை காட்டிலும் 100 எலும்புகள் அதிகம் உள்ளது.

* பொருட்களை வெப்பப் படுத்தினால் விரிவடையும். இதன் அடிப்படையில் ஈபில் கோபுரம் கோடை காலத்தில் 15 செ. மீ. உயர்ந்து விடும்.

* உலகின் 20% ஆக்ஸிஜன் அமேசான் காடுகளில் உற்பத்தி ஆகிறது

* சோடியம் எனும் தனிமம் அதிகம் வினை புரியும் தன்மை உடையது. இதன் விசேஷ தன்மை இதை தண்ணீரில் போட்டால் வெடிக்கும்

நீதிக்கதை

ஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் அறியாமல், அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தன் இடமாகத் தேர்ந்தெடுத்தார். கோபமடைந்த ஒரு அரக்கன் அவரைப் பார்த்துக் கேட்டான்.

“”யார் நீ? இந்த அமைதியான பள்ளத்தாக்கை கெடுக்க வந்தாயா?” என்றான்.


“”தயவு செய்து என்னை மன்னித்து விடு. நான் ஒரு அறிஞன். அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அதனால், இங்கு வந்தேன்!” என்றார்.

“”இதற்கு ஒரு விலை நீ கொடுக்க வேண்டும். நான் உன்னைக் குரங்காக மாற்றி விடுவேன். அதுதான் உனக்குத் தண்டனை!” என்று அந்த அரக்கன் கூறினான்.

அடுத்த கணம், அந்தக் அறிஞர் குரங்காக மாறிவிட்டார். அவர் விம்மி விம்மி அழுதார். ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிக் கொண்டிருந்தார். குரங்குகளைப் போல் பழங்களைத் தின்று வந்தார்.

அவர் நகரத்தை அடைந்தார். அங்கு ஒரு கப்பல் பாக்தாத் பட்டணத்திற்குப் புறப்பட இருந்தது. அவர் அதில் தாவி ஏறினார். அதிலிருந்த பயணிகள் கூச்சலிட ஆரம்பித்தனர்.

“”குரங்கை வெளியே அனுப்புங்கள்; கொன்றுவிடுங்கள்!” என்று கத்தினர்.
கப்பலின் தலைவன் அந்த விலங்கிற்காக வருத்தப்பட்டுச் சொன்னார்.

“”வேண்டாம். அதுவும் நம்முடன் வரட்டும். யாருக்கும் அது தொந்தரவு தராதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன்!”

அந்தக் குரங்கு கப்பல் தலைவனுக்கு நன்றி உடையவனாய் இருந்தது. பாக்தாத்தில் ஒரு செய்தி பரவி இருந்தது. அரசருக்கு ஆலோசனை கூறுபவர் இறந்துவிட்டதாகவும், அரசர் அந்த இடத்திற்குத் தகுந்த ஆளைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாகவும் அறிவித்திருந்தார். இப்பதவியை விரும்புவோர் ஏதேனும் ஒரு செய்தியைத் தகுந்த முறையில் எழுதி அனுப்பலாம். அவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளதோ, அதை எழுதியவர் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

அந்தக் குரங்கு அறிஞரும் செய்தியை எழுதினார். அரசருடைய சேவகர்களும், மற்றவர்களும் நகைத்தனர். “”இங்கே வேடிக்கையைப் பார். இந்தக் குரங்கு அரசருக்கு ஆலோசகராகப் போகிறதாம்!” என்று கேலி செய்தனர். ஆனால், எல்லாச் செய்திகளும் அரசரிடம் எடுத்துச் செல்லப்பட்டன. அரசர் எல்லாவற்றையும் படித்தார். அந்தக் குரங்கின் செய்தி மிகவும் நன்றாக இருந்தது.

அந்தக் குரங்கை நேர்முகத் தேர்விற்காக அரசர் வரச் சொன்னார். அக்குரங்கு நல்ல கம்பீரமாக உடையணிந்து குதிரைமேல் ஏறி, பாக்தாத் தெருக்களில் ஊர்வலமாக வந்து அரசரைச் சந்தித்தது. அரசவையில் அதனிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அது எல்லாக் கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான சரியான விடைகளைக் கூறியது. அரசருக்கு அதை மிகவும் பிடித்து விட்டது. ஆனால், மந்திரிகள் தடுத்தனர்.

“”எப்போதும் அதனால் பேச முடியாது. எப்படி ஒரு குரங்கு தலைமை ஆலோசகர் ஆகமுடியும்?” என்றனர்.

அரசர் தீர்மானமாக இருந்ததால் அவர் குரங்கையே தலைமை ஆலோசகராக நியமித்தார். அவருடைய புதல்வி, இளவரசி இந்தக் குரங்கு உண்மையில் குரங்கு அன்று. ஏதோ அரக்கர்களின் மாயத்தால் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தாள். அரக்கர்கள், அவர்களின் மந்திர வித்தைகள் போன்றவற்றை அவள் படித்துள்ளாள். அந்த மந்திரத்தால் குரங்குத்தன்மை மாறும்படி செய்தாள். அறிஞர் தன் பழைய நிலையை அடைந்தார்.

அவர் இளவரசிக்கு நன்றி கூறினார். பல ஆண்டுகள் அங்குத் தங்கி நன்றியறிதலோடு அரசருக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.

*நீதி*: அறிவுடையோர் எவ்வுருவில் இருந்தாலும் மதிக்கப்படுவர்.

இன்றைய செய்திகள்
04.12.18

* மதுரையில் டிசம்பர் 10 முதல் பிளாஸ்டிக் உபயோகத்திற்கு தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

* இந்தியாவில் சென்னையில் தயாரிக்கப்பட்டிருக்கும் முதல் அதிவேக ரயிலான ட்ரெயின் 18 தனது சோதனை முயற்சியில் மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தை கடந்த ஞாயிறன்று நிறைவு செய்தது.

* கிருஷ்ணகிரியில் நடந்த மாவட்ட அளவிலான அறிவியல் மாநாட்டில், புதிய படைப்பினை காட்சிப்படுத்தி முதல் பரிசு, தங்கப்பதக்கம் பெற்ற கிருஷ்ணகிரி அரசு மகளிர் பள்ளி மாணவிகள்

* ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற யு-19 ஆடவர் நேஷனல் சாம்பியன்ஷிப்பில் இளம் வீரர் ஒல்லி டேவிஸ் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர் அடித்து சாதனை படைத்துள்ளார்.

* மும்பையில் நடைபெற்ற டாடா ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென் சாம்பியன் பட்டம் வென்றார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post