Title of the document

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க தேசிய தேர்வு முகமை கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கஜா புயலால் தமிழகம் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. தஞ்சாவூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் பெரிய இழப்பை சந்தித்துள்ளது. முக்கியமாக மாணவர்கள் தங்கள் புத்தகங்கள், ஆவணங்களை இழந்து உள்ளனர்.



இந்த புயலில் பல மாணவர்கள் தங்கள் உடைமைகளை இழந்துள்ளனர். இந்த நிலையில் மருத்துவம் படிக்கும் எண்ணத்தில் இருக்கும் மாணவர்களுக்கு கஜா புயல் பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு 2019 மே 5ம் தேதி நடக்க இருக்கிறது.
இந்த தேர்விற்கு இப்போதே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். வரும் நவம்பர் 30ம் தேதியுடன் இதற்கான கால அவகாசம் முடிகிறது. இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் கஜா புயலால் டெல்டா பகுதி மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க தேசிய தேர்வு முகமை கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று மதுரைமேலூரை சேர்ந்த ஸ்டாலின் என்பவர் மதுரை ஹைகோர்ட் கிளையில் மனுதாக்கல் செய்து இருந்தார்.
அந்த மனு மீதான விசாரணையில் இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதன்படி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க தேசிய தேர்வு முகமை கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும். மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு புதிய இறுதி தேதியை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே தேசிய தேர்வு முகமை கூடுதல் கால அவகாசம் வழங்கும் திட்டத்தில் இருப்பதாக தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post