Title of the document

அன்னவாசல் நவம்பர் 14:    
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம் மேலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா மற்றும் மின்னல் நட்சத்திரங்களின் மகிழ்வுப் பள்ளி தொடக்க விழா நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்டு இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் குணசேகரன் பேசியதாவது:
ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை நாம் குழந்தைகள் தினவிழாவாக கொண்டாடி வருகிறோம். காரணம் அவர் குழந்தைகள் மீது கொண்ட பற்றும் குழந்தைகள் அவர் மீது கொண்ட பற்றே ஆகும். செல்வந்தர் வீட்டில் பிறந்து அயல்நாட்டில் படித்தாலும் இந்திய நாட்டிற்கு சுதந்திர முன்னர் பல இன்னல்களை அந்நிய நாட்டினர் கொடுத்ததால் அந்நிய நாட்டின் மீது வெறுப்பு ஏற்பட்டு நம்நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டார்..சுதந்திரத்திற்கு முன் மேற்கத்திய ஆடைகளை அணிந்தவர் சுதந்திரத்திற்கு பின்பு மக்களோடு மக்களாக இருந்து சாதாரண ஆடைகளை அணிவதையே தம் வழக்கமாக கொண்டவர்.  இன்று பல்வேறுதுறைகளில் நாடு வளர்ச்சி அடைந்து உள்ளதற்கு காரணம் ஜவஹர்லால் நேருவே ஆவார். எனவே குழந்தைகள் அனைவரும் நன்றாக படித்து அவரது கனவுகளை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேற்றினால் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். எனவே மாணவர்கள் அனைவரும் நேருவின் வழியைப் பின்பற்றி சிறந்த மாணவர்களாகவும் நல்ல மனிதர்களாகவும் மாணவர்கள் வர வேண்டும் என்றார்.

முன்னதாக பள்ளிக்குழந்தைகளுடன் குழந்தைகள் தினவிழா கேக் வெட்டி மாணவர்களுக்கு ஊட்டிவிட்டார். மாணவர்களும் ஊட்டிவிட்டனர்.
விழாவிற்கு அன்னவாசல் வட்டாரக் கல்வி அலுவலர் பொன்னழகு தலைமை வகித்தார். அன்னவாசல் வட்டாரக் கல்வி அலுவலர் துரையரசன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோவிந்தராஜ்,
ஆசிரிய பயிற்றுநர் முஜ்ஜமில்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமைஆசிரியர் கிறிஸ்டி வரவேற்றுப் பேசினார்.
மின்னும் நட்சத்திரங்களின் மகிழ்வுப் பள்ளி என்ற மழலையர் வகுப்பினை எழுத்தாளர், கல்வியாளர்கள் சங்கம மாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார் தொடங்கி வைத்தார். படைப்போம் பசுமைகிராமம்  3-ம் ஆண்டு நிகழ்வினை திருச்சி மாவட்டம், பொன்னம்பட்டி செயல் அலுவலர் மறுசுழற்சி நாயகன் சாகுல்ஹமீது தொடங்கி வைத்தார்.
பாராம்பரிய உணவுத் திருவிழா கண்காட்சியினை தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் மன்றம் சண்முகநாதன் தொடங்கி வைத்தார் மின்னும் நட்சத்திரங்களின் மகிழ்வுப் பள்ளி என்ற பெயரில் மழலையர் வகுப்பினை தொடங்கிடவும், தொடர்ந்து நடத்தவும் அமெரிக்காவில் உள்ள வடக்கு தாலஸ் தோழிகள் குழுவினைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவரின்  நன்கொடையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நன்கொடையாளர்கள் பள்ளிகளை ஏற்கும் சவால் திட்டத்தில் தமிழக அளவில் இது ஏழாவது பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.  மழலையர் வகுப்பிற்கான விளையாட்டு உபகரணங்களை சிங்கப்பூர் தொழிலதிபர்  நாகராஜ் வழங்கினார்.
    
இன்று நடைபெற்ற மழலையர் வகுப்பு தொடக்க விழாவின் முதல் நாளிலேயே 31-மாணவர்கள் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மழலையர் வகுப்பானது விளையாட்டுப் பொருள்களுடன் கூடிய தனி அறையாக அமைந்துள்ளது இதன் சிறப்பாகும்.
முடிவில் ஆசிரியர் சுஜாமெர்லின் நன்றி கூறினார். இடைநிலை ஆசிரியை எஸ்தர் கிறிஸ்டியானா விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
விழாவில் ஏராளமான ஊர் பொதுமக்கள், பள்ளிமேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை பெற்று சென்றனர். விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post