ஆசிரியர் பணியை பாதிக்கும் வகையில் உள்ள இதர பணிகளைச் செய்யுமாறு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை கல்வித்துறை அதிகாரிகள் வலியுறுத்தக்கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் க.உதயகுமார் தலைமை வகித்தார். இச்சங்கத்தின் மாநிலப் பொருளாளர் மற்றும் மாவட்டச் செயலாளருமான சு.கதிரவன் கோரிக்கைகள் குறித்து விளக்கவுரை நிகழ்த்தினார்.
இதில், 21-மாத நிலுவைத் தொகையை வழங்குதல், ஆசிரியர் பணிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சத்துணவு குறித்த குறுஞ்செய்தி அனுப்புதல் மற்றும் இதர வேலைகளைச் செய்யுமாறு ஆசிரியர்களை நிர்பந்திப்பதை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், மாவட்டப் பொருளாளர் பி.எஸ்.பூங்கோதை, மாநில துணைச் செயலாளர், நிர்வாகிகள் தாமரைச்செல்வன், கோவலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Post a Comment