Title of the document

முதல் முறையாக, குடிமைப் பணி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தேர்வு எழுதுவதில் இருந்து விலகிக் கொள்ள அனுமதிப்பதற்கு மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) முடிவு செய்துள்ளது.
அந்த ஆணையத்தின் 92-ஆவது ஆண்டு நிறுவன தினம், தில்லியில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. அதில், பங்கேற்ற யுபிஎஸ்சி தலைவர் அரவிந்த் சக்சேனா பேசியதாக, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற பணிகளுக்குத் தகுதியானவர்களை ஆண்டுக்கு ஒரு முறை தேர்வு நடத்தி மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம் தேர்ந்தெடுக்கிறது. முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
இதில், முதனிலைத் தேர்வு எழுதுவதற்காக 10 லட்சம் பேர் விண்ணப்பித்தால், பாதி பேர் மட்டுமே தேர்வு எழுதுகிறார்கள். ஆனால், 10 லட்சம் பேர் தேர்வெழுதக் கூடிய வகையில், வினாத்தாள் தயாரிப்பு, தேர்வு மையங்கள் அமைப்பது, தேர்வு கண்காணிப்பாளர்கள் நியமிப்பது போன்ற விரிவான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியுள்ளது. இதனால், தேர்வாணையத்தின் 50 சதவீத உழைப்பும், சக்தியும் வீணாகிறது.
எனவே, தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கடைசி நேரத்தில் தேர்வு எழுதுவதில் இருந்து விலக அனுமதிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் பொறியியல் பணிகளுக்கான தேர்வில், இந்தப் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படும்.
தேர்வுக்கு விண்ணப்பித்த பிறகு, கடைசி நேரத்தில் தேர்வு எழுத விரும்பவில்லையெனில், தங்களது விண்ணப்பம் தொடர்பான விவரங்களை குடிமைப் பணிகள் தேர்வாணையத்துக்கு மாணவர்கள் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு, தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட விஷயம், அவர்களுக்கு குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். ஆனால், விலக்கு அளிக்கப்பட்ட பிறகு மீண்டும் அதே தேர்வை எழுதவதற்கு அவர்கள் அனுமதி கோர முடியாது என்று அரவிந்த் சக்சேனா கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்ப்டடுள்ளது.
 
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post