Title of the document
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 12 ஆவது இடத்திலிருந்து 7ஆவது இடத்துக்கு தமிழகம் முன்னேறியுள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
மாநில அளவிலான பாரதியார் விளையாட்டுப் போட்டிகள் தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை தொடங்கின. விழாவுக்கு அமைச்சர் செங்கோட்டையன் தலைமை வகித்துப் பேசியதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விளையாட்டுத் துறை வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார். அதோடு, மாணவர்களுக்கு பல்வேறு சரித்திர சாதனைகளைச் செய்துள்ளார்.
சாதனை புரிந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு வேலைவாய்ப்புகளில் 3 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. அதோடு, மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு 1, 6, 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டங்கள் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் செயல்படுத்தப்பட்டுள்ளன.
ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையும், 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையும் படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டில் சீருடை மாற்றியமைக்கப்படும். மேலும் தமிழ்நாடு அரசின் சார்பில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் 11.17 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் மிதிவண்டிகளும், மடிக்கணினிகளும் வழங்கப்படும்.
அதுபோல், 32 மாவட்டங்களிலிருந்து 2,222 மாணவர்கள், 2,198 மாணவிகள் என மொத்தம் 4,420 மாணவர்கள் கலந்துகொள்ளும் விளையாட்டுப் போட்டிகள் இங்கு நடைபெறவுள்ளன.
இந்தியப் பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் நடத்தும் தேசிய அளவிலான போட்டிகள், சர்வதேசப் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்பதற்கு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில், அப்போட்டிகளை நடத்துவதற்கு கடந்த 5 ஆண்டுகளாக ரூ.10 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. இதன்மூலம், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 12ஆம் இடத்தில் இருந்த தமிழ்நாடு 7ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
நிகழாண்டுக்கான 63-ஆவது இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு கூட்டமைப்புப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், தமிழக மாணவர்கள் 80 தங்கப் பதக்கமும், 67 வெள்ளிப் பதக்கமும், 59 வெண்கலப் பதக்கமும் பெற்றனர். தமிழக மாணவிகள் 135 தங்கப் பதக்கம், 96 வெள்ளிப் பதக்கம், 88 வெண்கலப் பதக்கம் என மொத்தமாக 525 பதக்கங்களைப் பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.
கடந்த ஆண்டிலிருந்து இந்தியப் பள்ளி விளையாட்டுகளுக்கான கூட்டமைப்புப் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெறுபவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், வெள்ளிப் பதக்கம் பெறுவர்களுக்கு தலா ரூ.1.5 லட்சமும், வெண்கலப் பதக்கம் பெறுபவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் ஊக்கத் தொகையாக அரசு வழங்கி வருகிறது.
நீட் தேர்வுக்காக 413 மையங்களில் 25,000 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கான பயிற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பட்டயக் கணக்காளர் எனும் சிறந்த ஆடிட்டர்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பட்டயக் கணக்காளர்களை உருவாக்க 12-ஆம் வகுப்பு தேர்வு முடிந்தவுடன் 500 பட்டயக் கணக்காளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும். மாணவர்கள் இந்த வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்தி கல்வித் துறையிலும், விளையாட்டுத் துறையிலும் முன்னேற வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து, ஊரகத் தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் பேசியதாவது:
தமிழகத்தில்தான் விளையாட்டுத் துறைக்கென்று ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு, அதிமுக ஆட்சியில்தான் சிறந்த விளையாட்டு மைதானமான நேரு விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது. விளையாட்டுத் துறையை ஊக்குவிக்கும் வகையில் கிராம அளவிலான, மாவட்ட அளவிலான, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆகவே மாணவர்கள் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை முதல் இடத்துக்கு கொண்டுவர வேண்டும் என்று பெஞ்சமின் தெரிவித்தார்.
இவ்விழாவில், மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, காஞ்சிபுரம் எம்.பி. மரகதம் குமரவேல், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ
கே.பழனி, முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் எம்.வாசு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெ.ஆஞ்சலோ இருதயசாமி, முன்னாள் எம்எல்ஏ-க்கள் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் எம்.பி.க்கள் பன்னீர்செல்வம், ராஜேந்திரன், கூட்டுறவு சங்கத் தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post