Title of the document
தமிழக பள்ளிக் கல்வித் துறை, பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக எவ்வாறு பட்டாசு வெடிக்க வேண்டும் என்பதுகுறித்த ஆலோசனையை வழங்கியுள்ளது.  இதைத் தலைமை ஆசிரியர்கள் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் தெரிவித்து, விழிப்பு உணர்வை ஏற்படுத்திட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
தீபாவளி பள்ளிக்கல்வித் துறை
தீபாவளிக்கு முன் தினமான திங்கள்கிழமை அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது தமிழக அரசு. தீபாவளிப் பண்டிகையின்போது மாணவர்களுக்குத் தீ விபத்துப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், ஒவ்வொரு பள்ளியின் தலைமையாசிரியரும் காலையில் இறை வணக்கக் கூட்டத்தில் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பதுகுறித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கிட வேண்டும். இதை, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் மாவட்டக் கல்வி அலுவலர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது பள்ளிக் கல்வித் துறை.
பாதுகாப்பாகப் பட்டாசு வெடிப்பதுகுறித்து  10 ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
1. குழந்தைகள், பெற்றோர்களின் முன்னிலையில் அவர்களது பாதுகாப்பின் கீழ் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். இளம் சிறார்கள் வெடிகளைக் கொளுத்த அனுமதிக்கக் கூடாது.
2. பட்டாசு கொளுத்தும்போது, தளர்வான ஆடைகள் உடுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது, டெரிகாட்டன் / டெரிலின் ஆகிய எளிதில் பற்றக்கூடிய ஆடைகளை அணியக் கூடாது.
3. பட்டாசு கொளுத்துமிடத்துக்கு அருகில் ஒரு வாளியில் தண்ணீரையோ அல்லது மணலையோ வைத்துக்கொள்ளுங்கள்.
4. பட்டாசை கையில் வைத்துக்கொண்டோ அல்லது உடலுக்கு அருகிலோ வைத்து பற்றவைக்கக் கூடாது. மாறாக, பாதுகாப்பான தொலைவில் வைத்தே வெடியுங்கள். வெடிக்காத பட்டாசுகளைக் குனிந்து பரிசோதிப்பதைத் தவிர்த்தல் வேண்டும்.
5. மூடிய பெட்டிகளில் அல்லது பாட்டில்களின் மேல் வைத்து பட்டாசுகளை வெடிக்கச் செய்யாதீர்கள். கண்ணாடிப் பொருள்கள் வெடித்து கண்களில் பட்டு, கண் பார்வை பாதிப்படையக் கூடும்.
6. ராக்கெட்டுகளை குடிசைகள் இல்லாத வெட்ட வெளிப்  பகுதிகளில் மட்டுமே செலுத்துங்கள்.
7. பட்டாசுகளை மக்கள் அதிகமாகக் கூடும் பகுதிகளிலும், தெருக்களிலும் மற்றும் சாலைகளிலும் வெடிக்கக் கூடாது. பட்டாசுகளை விற்பனைசெய்யும் கடைக்கு முன்பகுதியிலோ அல்லது அருகிலோ வெடிக்கக் கூடாது. பெட்ரோல் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அருகிலோ அல்லது பெட்ரோல் எரிபொருள் கடைகளுக்கு முன்போ, பட்டாசுகளை வெடிக்கவோ கொளுத்தவோ கூடாது.
8. மருத்துவமனைக்கு அருகிலும், முதியோர் இல்லங்களுக்கு அருகிலும் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிருங்கள்.
9. விலங்குகளைத் துன்புறுத்தும் வகையிலும், அவை பயப்படும் வகையிலும் பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.
10. அதிக சப்தமுள்ள பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். ஏனெனில், அது உடலையும் மனநிலையையும் பாதிக்கும். காதுகள் பாதிக்கப்படக்கூடும். ஒரு நாள் கொண்டாட்டத்திற்காக வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டாம்' என்று  கல்வித்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் ஒரு வார கால இடைவெளி மட்டுமே உள்ளது. இந்த நிலையில், தீபாவளி கொண்டாட்டத்தின்போது ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கும் வகையில், பள்ளிகளில் விழிப்பு உணர்வு செயல்முறைக் காட்சிகள் செய்தும், பொது இடங்களில்  மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பேரணிகள், தீ விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்புகுறித்து, தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை அலுவலர்களைக் கொண்டு விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது பள்ளிக்கல்வித் துறை.
பாதுகாப்பான முறையில் கொண்டாடுவோம்! விபத்துகளைத் தடுப்போம்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post