காவல் நிலையத்தில் புகார் கொடுப்பது எவ்வாறு என்பது பற்றிய அடிப்படை அறிவு ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும்.
குற்றம் எந்த காவல்நிலைய எல்லைக்குள் நடந்ததோ அந்த காவல் நிலையத்தில் மட்டுமே புகார் கொடுக்கப்படவேண்டும் ஒரு வேலை தவறுதலாக வேறு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால், அந்த காவல் நிலைய அதிகாரி முறையான காவல்நிலைய எல்லையை தெரியப்படுத்தி அறிவுறுத்த வேண்டும். கொலை செய்துவிட்டு முண்டத்தை கையில் எடுத்துக்கொண்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்த சம்பவங்கள் தமிழகத்தில் நடந்துள்ளன.
குற்றங்கள், பிடியாணை இன்றி கைது செய்யக்கூடிய குற்றங்கள் (Cognizable Offences), பிடியாணையுடன் மட்டுமே கைது செய்யக்கூடிய குற்றங்கள் (Non Cognizable Offence) என்று இரண்டாக சட்டத்தால் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. பிடியாணையின்றி கைது செய்யக்கூடிய குற்றங்களுக்கு மட்டுமே காவல்துறை அதிகாரிகள் குற்றம் பற்றிய தகவல் கிடைத்ததும் முதல் தகவல் அறிக்கையை(FIR) CrPC பிரிவு 154 ன்கீழ் பதிவு செய்யமுடியும்.
காவல் நிலையத்திற்கு, ஒரு குற்றச் சம்பவம் தொடர்பான தகவலானது எழுத்து மூலமாக நேரடியாக கொடுக்கப்படவேண்டும். வாய்மொழியாக புகார் கொடுத்தால் அதை காவல்துறை அதிகாரி எழுத்தால் எழுதி புகார்தாரருக்குப் படித்துக் காட்டி கையெழுத்துப் பெறவேண்டும்.
புகாரில் தேதி, சம்பவ நேரம், சம்பவ இடம், சம்பவம் எப்படி நடந்தோ... அதை அப்படியே குறிப்பிடவேண்டும். புகாரில் சொல்லப்பட்ட குற்றச் சம்பவம் இந்திய சட்டங்களில் ஏதேனும் ஒன்றிலாவது குற்றமாக இருக்கவேண்டும். சில சமயங்களில் புகார் கொடுக்கும் பொழுது சட்டப்பிரிவுகள் பொருத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக, புகார் எழுதுபவர் அல்லது புகாரை எழுத உதவி செய்பவர் புகாரில் சங்கதிகளை கூட்டியோ குறைத்தோ எழுதுவார்கள். இது தவறா? சரியா? என்பதைப்பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
புகார் கொடுப்பவருக்கு உடனடியாக இலவசமாக முதல் தகவல் அறிக்கை நகல் கொடுக்கப்படவேண்டும்.
புலன் விசாரணை
முதல் தகவல் அறிக்கை என்பது ஒரு குற்றம் சம்பந்தமாக காவல்நிலையத்திற்கு வரும் முதல் தகவல் பற்றிய அறிக்கையாகும்
முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தபின்பு தான் புலன்விசாரணை தொடங்கவேண்டும்
புகாரை பதிவு செய்யும் காவல்அதிகாரியே புலன் விசாரணையையும் செய்யக்கூடாது என்பது பெரும்பாலும் கடைபிடிக்கப்படும் நடைமுறை. அவ்வாறு செய்தால் உண்மையை கண்டறிய முடியாமல் போய்விட வாய்ப்புள்ளது.
போதை தடுப்பு பிரிவு காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு முன்பே புலன்விசாரணை சில வழக்குகளில் தொடங்கிவிடுகிறார்கள் காரணம் காவல்நிலையத்திற்கு வந்து முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்துவிட்டு புலன்விசாரணை செய்வது போதைபொருட்கள் கடத்தல் வழக்கு நடைமுறைகளில் சாத்தியம் இல்லை.
FIR யார் யாருக்கு அனுப்பப்படும்?
முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த அதிகாரி அதன் ஒரிஜினலை நீதிமன்றத்திற்கு உடனடியாக அனுப்பவேண்டும்.
ஒரு நகலை புலன் விசாரணை அதிகாரிக்கு, புலன் விசாரணைக்காக அனுப்பவேண்டும்.
ஒரு நகலை மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
ஒரு நகலை புகார் கொடுப்பவருக்கு கொடுக்கவேண்டும்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு முதல் தகவல் அறிக்கையின் நகல் நீதிமன்றத்தின் மூலமாக இலவசமாக கொடுக்கப்படும்.
ஒரு குற்றவழக்கை தொடங்கி வைப்பதே இந்த முதல் தகவல் அறிக்கை தான் ஒரு குற்றத்திற்கு ஒருமுறை தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும். ஒரே நேரத்தில் அல்லது தொடர்ச்சியாக ஒரே நபர்களால் செய்யப்பட்ட ஒரே வகையான அல்லது பல்வேறு வகையான குற்றங்களை ஒருங்கிணைத்தும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யலாம். குற்றத்தை செய்தவரே காவல் நிலையத்தில் நேரடியாக சென்றும் புகார் கொடுக்கலாம்.
FIR மொழி
முதல் தகவல் அறிக்கை அந்தந்த மாநில மொழியில் பதிவு செய்யப்படும்.
Post a Comment