சிலவருடங்களுக்கு முன் ஐரோப்பிய கார்டியோலஜி அமைப்பு (European Society of Cardiology), வலிநிவாரணிக்கான மாத்திரைகளை ஆய்வுசெய்தது. அந்த ஆராய்ச்சியின் முடிவில், நான் - ஆஸ்பிரின் (Non-Aspirin) தன்மை கொண்ட வலிநிவாரணி மாத்திரைகளை, இதயப் பிரச்னை இருப்பவர்களுக்குப் பரிந்துரை செய்யக்கூடாது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக நான்-ஆஸ்பிரின் மாத்திரைகளில், பாராசிட்டமால், டைக்ளோஃபெனக் (Diclofenac), இபுப்ரோஃபென் (Ibuprofen), நப்ரோக்சென் (Naproxen) என நிறைய வேதிப்பொருள்கள், தனித்தனி மாத்திரைகளாக இருக்கும்.
இதில், டைக்ளோஃபெனக் என்ற வேதிப்பொருளை மட்டும் வைத்து டென்மார்க்கின் ஆர்ஹூஸ் பல்கலைக்கழகம் (Aarhus University Hospital in Denmark) தற்போது ஆய்வு நடத்தியுள்ளனர். 1996-ம் ஆண்டு தொடங்கிய இந்த ஆய்வுகள், 2016 வரை தொடர்ந்து நடைபெற்றுள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில், பெரும்பாலானோர் 46 முதல் 56 வயதுக்கு உட்பட்டவர்கள்.
நான்-ஆஸ்பிரின் வகையான டிப்ளோஃபெனக் வகை மாத்திரைகள் உட்கொள்பவர்களைப் போலவே பாராசிட்டமால், நாப்ரோக்சன் போன்ற மாத்திரைகள் உட்கொள்பவர்களையும் ஆய்வில் உட்படுத்தியிருந்தனர் அந்த மருத்துவர்கள். இறுதியில், இருபிரிவினருக்கும் ஏற்படும் பாதிப்புகளையும் ஒப்பிட்டுள்ளனர். அதில், டைக்ளோஃபெனக் உபயோகிப்பவர்களுக்கு, பாதிப்புக்கான வாய்ப்பு 20 சதவிகிதம் அதிகமிருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல ஏற்கெனவே வலி நிவாரணிக்கான மாத்திரைகள் உட்கொள்ளாதவர்களின் உடல்நிலையோடு ஒப்பிட்டபோது, டைக்ளோஃபெனக் வகை மாத்திரை உட்கொள்பவர்களுக்கு, 50 சதவிகிதம் அதிக பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
பாராசிட்டமால், இபுப்ரோஃபென் போன்றவற்றை உட்கொள்பவர்களைவிடவும், டைப்ளோஃபெனக் உட்கொள்பவர்களுக்கு முப்பது நாள்களிலேயே இதயத்துடிப்பு சீரற்று இருப்பது (Arrhythmia), பக்கவாதம் (Ischemic Stroke), மாரடைப்பு, இதய செயலிழப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறதாம். ஏற்கெனவே சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பு பிரச்னை இருப்பவர்களுக்கு, இதயப் பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகமிக அதிகம் என்கிறது ஆய்வு. ஆகவே, வலி நிவாரணிக்கான மாத்திரை உட்கொள்பவர்கள், இனி உங்கள் பெர்சனல் மருத்துவரிடம் ஆலோசித்தபின்னர் அதை உபயோகப்படுத்தவும்!
Post a Comment