இந்திய கல்வித் தரத்தை உலக அளவில் உயர்த்துவதற்கு மத்திய அரசு செயல்பட்டு வரும் நிலையில், ஊரக வளர்ச்சித் துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் மொத்தம் 13,511 கிராமங்களில் பள்ளிக்கூடங்களே கிடையாது என்று ஊரக வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.
மிசோரம் மாநிலத்தில் மட்டும் தான் பள்ளிகளே இல்லாத கிராமங்களின் எண்ணிக்கை ஒன்று கூட இல்லை. இந்த புள்ளி விவரத்தில் வடகிழக்கு மாநிலங்களின் செயல்பாடுகள் மற்ற மாநிலங்களைவிட நல்ல நிலையிலேயே உள்ளது. அதிகபட்சமாக மேகாலயா மாநிலத்தில் மட்டும் பள்ளிகள் இல்லாத கிராமங்கள் எண்ணிக்கை 41 ஆக உள்ளது. மற்ற மாநிலங்களில் பள்ளிகள் இல்லாத கிராமங்கள் எண்ணிக்கை ஒற்றை இலக்காகவே உள்ளது.
ஒட்டுமொத்த இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் பள்ளிகள் இல்லாத கிராமங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. ஊரக வளர்ச்சித் துறை வெளியிட்ட இந்த அறிக்கையில் கோவா குறித்தான தகவல்கள் இடம்பெறவில்லை.