Title of the document

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு (2019-20) முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கான செப்டம்பர் மாத துணைத் தேர்வு முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெறும் பொதுத் தேர்வில் தோல்வி அடையும் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தேர்ச்சி அடையாத அனைத்துப் பாடங்களிலும் தேர்வு எழுதுவதற்காக ஜூன், ஜூலை மாதங்களில் உடனடி சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
செம்டம்பர் மாத தேர்வு ரத்து ஏன்?:உடனடி சிறப்பு துணைத்தேர்வின் மூலம் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளில் தோல்வி அடைந்த பாடங்களை மாணவர்கள் எழுதி, தேர்ச்சி பெற்று உயர் கல்வியில் சேர்ந்தனர். அரசு பொதுத் தேர்வு, உடனடி சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், செப்டம்பர் மாதம் நடைபெறும் துணைத் தேர்வினை எழுதி தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு தற்போது செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டு வரும் பொதுத் தேர்வினை வரும் கல்வியாண்டு (2019-2020) முதல் ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: அரசு தேர்வுத்துறை இயக்குநர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளபடி பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மற்றும் ஜூன், ஜூலை மற்றும் செப்டம்பர், அக்டோபர் ஆகிய 3 பருவங்களில் நடத்தப்படுகின்றன. மார்ச், ஏப்ரல் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டவுடன் ஜூன், ஜூலை மாதம் சிறப்பு துணைத் தேர்வுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கி தேர்வுக்கு பின் அனைத்துப் பணிகளும் ஆகஸ்ட் மாதத்தில் நிறைவடையும்.
பணிச் சுமை காரணமாகவும்...இதைத்தொடர்ந்து செப்டம்பர், அக்டோபர் பருவத் தேர்வுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டு தேர்வுக்கு பின்னர் அனைத்துப் பணிகளும் நவம்பர் மாத இறுதியில் நிறைவடையும். மார்ச் பொதுத் தேர்வுக்காக புதிய தேர்வு மையம் அமைத்தல், பெயர் பட்டியல் தயாரித்தல் போன்ற பணிகள் ஆகஸ்ட் மாதத்திலேயே தொடங்கிவிடும். மார்ச் பொதுத் தேர்வுக்கான முன்னிலை பணிகள் நடைபெறும் போதே செப்டம்பர் தேர்வுக்கான பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
ஆசிரியர் பணியும் பாதிப்பு: மேலும் ஜூன், ஜூலை உடனடி சிறப்பு துணைத் தேர்வு அறிவிக்கப்பட்ட பின்னர், செப்டம்பர், அக்டோபர் துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. குறைவான தேர்வர்கள் விண்ணப்பித்தாலும் மார்ச் பருவத் தேர்வுகளை நடத்துவது போலவே அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதனால் ஆசிரியர்களின் கற்பித்தல் பணி மிகவும் பாதிக்கப்படுகிறது.
எனவே, செப்டம்பர் மாதம் நடத்தப்படும் துணைத் தேர்வினை ரத்து செய்துவிட்டு ஜூன், ஜூலை மாதம் நடைபெறும் உடனடி சிறப்பு துணைத் தேர்வு மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும் பொதுத்தேர்வு மட்டும் நடத்திட அரசு அனுமதிக்க வேண்டும் என அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் அரசிடம் கேட்டுள்ளார்.
அதனை அரசு கவனமுடன் பரிசீலித்து, தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு (2019-2020) முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு மார்ச், ஏப்ரல் பொதுத்தேர்வு, ஜூன், ஜூலை சிறப்பு துணைத் தேர்வுகள் மட்டும் நடத்தப்படும். செப்டம்பர், அக்டோபர் துணைத் தேர்வுகளை ரத்து செய்யலாம் என அரசு ஆணையிடுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post