Title of the document


எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இரண்டாம்கட்ட கலந்தாய்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சமர்ப்பிக்கப்படும் 15 சதவீத இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள், தொழிலாளர் ஈட்டுறுதி நிறுவனத்தின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் இடங்கள் ஆகியவற்றுக்கான கலந்தாய்வை மத்திய சுகாதார இயக்ககம் நடத்துகிறது. முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற்று, 12,683 பேருக்கு எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டன. இரண்டாம்கட்ட கலந்தாய்வு ஜூலை 10,11 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. முடிவுகள் ஜூலை 12 -ஆம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
முடிவுகள் வெளியீடு: ஆனால் இதுதொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அளித்த உத்தரவின்பேரில் அகில இந்திய கலந்தாய்வு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் நிறுத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையும் அகில இந்திய கலந்தாய்வுக்கு தடை விதித்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் இரண்டாம்கட்ட கலந்தாய்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. கலந்தாய்வில் இடங்களைப் பெற்றவர்கள் ஆகஸ்ட் 8 -ஆம் தேதிக்குள் அந்தந்த கல்லூரிகளில் சேர வேண்டும். ஆகஸ்ட் 8 -ஆம் தேதி மாலை கலந்தாய்வில் நிரம்பாத இடங்கள், மாணவர்கள் கைவிட்ட இடங்கள் ஆகியவை அந்தந்த மாநில ஒதுக்கீட்டுக்காகச் சமர்ப்பிக்கப்படும்.
தமிழகத்தில் எப்போது?: தமிழகத்தில் முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 1 முதல் 7-ஆம் தேதி வரை நடைபெற்றது. அகில இந்திய கலந்தாய்வு முடிவுகள் வெளியிடப்படாததால் இரண்டாம்கட்ட கலந்தாய்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் அகில இந்திய கலந்தாய்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழகத்தில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு எப்போது தொடங்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் டாக்டர் ஜி.செல்வராஜன் கூறியது:
அகில இந்திய கலந்தாய்வில் இடங்களைப் பெற்றவர்கள் கல்லூரியில் சேருவதற்கான கால அவகாசம் நிறைவடைந்த பிறகு, நிரம்பாத இடங்கள் மருத்துவக் கல்வி தேர்வுக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு தமிழகத்தில் இரண்டாம் கட்ட கலந்தாய்வை நடத்துவது தொடர்பான அட்டவணை வெளியிடப்படும் என்றார்.
மீண்டும் கலந்தாய்வு: தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 30, 31 தேதிகளில் நடைபெற்றது. கலந்தாய்வில் நிரம்பாத மீதம் உள்ள இடங்களுக்கான நீட்டிப்பு கலந்தாய்வு ஆகஸ்ட் 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் கலந்தாய்வு நடைபெறும்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post