Title of the document


பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.

 உரை:
அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.

பழமொழி :

A wild goose never lay a lame egg

புலிக்கு பிறந்தது பூனையாகுமா?

பொன்மொழி:

நோய் வருவரை உண்பவன், உடல் நலமாகும் வரை உண்ணா நோன்பு மேற்கொள்ள வேண்டிவரும்.

- தாமஸ் புல்லர்.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.மியான்மர் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாடு எது?
பர்மா

2.முல்லைப் பெரியாறு அணையினைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் யார்?பென்னி குவிக்

நீதிக்கதை :

அடைந்ததை அழித்தல்‏ - பஞ்சதந்திரக் கதைகள்
(The Monkey and The Crocodile - Panchtantra Story in Tamil)


ஒரு கடற்கரையிலே பெரிய நாவல்மரம் ஒன்றிருந்தது. அதில் எப்பொழுதும் பழங்கள் இருந்துகொண்டேயிருக்கும். அந்த மரத்தில் ரக்தமுகன் என்றொரு குரங்கு இருந்துவந்தது.

ஒருநாள் கராலமுகன் என்ற பெரிய முதலை ஒன்று அந்த நாவல் மரத்தின் அருகில் வந்தது. ரக்தமுகன் அதைப் பார்த்து, ‘‘நீ என் விருந்தாளி. அமுதத்துக்கொப்பான நாவற்பழங்களைத் தருகிறேன். சாப்பிடு!’’ என்று குரங்கு கூறி, நாவற்பழங்களை முதலைக்குக் கொடுத்தது.

பழங்களை முதலை சாப்பிட்டது. வெகுநேரம் குரங்குடன் பேசி இன்பமடைந்தபின் தன் வீட்டுக்குத் திரும்பிச் சென்றது. இப்படியே நாள்தோறும் முதலையும் குரங்கும் நாவல்மரத்தின் நிழலையடைந்து நல்ல விஷயங்களைப் பற்றிப் பேசி இன்புற்றுக் காலம் கடத்தி வந்தன. தான் சாப்பிட்டதுபோக மிஞ்சிய நாவற்பழங்களை முதலை வீட்டுக்குக் கொண்டுபோய் தன் மனைவிக்குக் கொடுத்து வந்தது.

ஒருநாள் முதலையின் மனைவி, ‘‘அமிருதம் போலிருக்கும் இந்த நாவற்பழங்கள் உங்களுக்கு எங்கே கிடைக்கிறது?’’ என்று முதலையைக் கேட்டது.

‘‘அன்பே, ரக்தமுகன் என்றொரு குரங்கு இருக்கிறது. அது என் நெருங்கிய நண்பன். அதுதான் இந்தப் பழங்களை எனக்கு அன்போடு தருகிறது’’ என்றது முதலை.

அதற்கு முதலையின் மனைவி, ‘‘அமிர்தம்போல் இருக்கும் இந்தப் பழங்களை எப்போதும் சாப்பிட்டுக் கொண்டிருப்பவனுடைய நெஞ்சும் கட்டாயம் அமிர்தம் போலத்தான் இருக்கும். நீ என்னை மதிக்கிறாய் என்றால் எனக்கு அந்தக் குரங்கின் நெஞ்சைக் கொண்டுவந்து கொடு. அதை நான் சாப்பிட்டு நோயும் முதுமையும் இல்லாமல் என்றும் உன்னோடு விளையாடிக்கொண்டிருப்பேன்’’ என்றது.

‘‘அன்பே, முதலாவதாக அது நமக்குச் சகோதரன்மாதிரி. இரண்டாவதாக, அது நமக்குப் பழங்களைத் தருகிறது. எனவே அதை நான் கொல்லமுடியாது. இந்த வீணான ஆசையை விட்டுவிடு.’’ என்றது.

அதற்கு முதலையின் மனைவியோ, ‘‘அந்த குரங்கை எனக்காக கொடுக்கவில்லை என்றால் நான் இறந்துவிடுவேன்’’ என்று சொல்லி கோவமாக சென்றது.

அந்த வார்த்தைகளைக் கேட்டதும் அதன் கண்களில் நீர் நிறைந்தது. ‘‘இனி நான் என்ன செய்வேன்? அந்தக் குரங்கை எப்படிக் கொல்வது?’’ என்று சிந்தித்தபடியே குரங்கிடம் போயிற்று.

வெகுநேரம் கழித்து முதலை கவலையோடு வருவதைக் குரங்கு பார்த்தது.

‘‘நண்பனே, ஏன் இவ்வளவு நேரம்? ஏன் சந்தோஷத்தோடு பேசமாட்டேன் என்கிறாய்? நல்ல நீதிகளையும் சொல்ல மாட்டேன் என்கிறாய்?’’ என்று குரங்கு கேட்டது.

‘‘நண்பனே, என் மனைவி ‘ஏ நன்றி கெட்டவனே, என் முகத்தில் விழிக்காதே. தினந்தோறும் நீ நண்பனிடம் பழங்களைப் பெற்றுச் சாப்பிடுகிறாய். ஆனால் அதற்குப் பதில் உபசாரம் செய்யும் முறையில் அதை உன் வீட்டு வாசலுக்கும் நீ அழைத்து வரவில்லையே! இந்த செயலுக்கு உனக்கு மன்னிபே கிடைத்து” என்றது

 ஆகவே, ‘‘நீ கராலமுகனை நம் வீட்டுக்கு அழைத்து வா. அப்போதுதான் நீ பதில் உபசாரம் செய்ததாகும். இல்லாவிட்டால் நீ என்னை இனிமேல் உயிரோடு பார்க்க முடியாது. மறு உலகத்தில் தான் பார்க்க முடியும்’’ என்று சொன்னாள். அவள் சொற்களைக் கேட்டுவிட்டு உன்னிடம் வந்திருக்கிறேன்.

‘‘உன் விஷயமாய் அவளோடு சண்டை போட்டதிலே இவ்வளவு நேரமாகிவிட்டது. நீ என் வீட்டுக்கு வா! என் மனைவி ஆவலோடு உன்னை எதிர்பார்த்து, வரவேற்பதற்குரிய ஏற்பாடுகளை செய்திருக்கிறாள்.’’ என்றது முதலை.

‘‘நண்பனே, அண்ணி சொன்னது சரிதான். எவ்விதமெனில், தருவது, பெறுவது; மனம்விட்டுப் பேசுவது, கேட்பது; விருந்து உண்பது, படைப்பது; இவை ஆறும் நட்புக்கு அடையாளங்கள் அல்லவா? ஆனால், நான் காட்டிலும் இருப்பவனாயிற்றே! உங்களுடைய வீடு நீருக்கடியில் அல்லவா இருக்கிறது! அங்கே நான் எப்படி வரமுடியும்?’’ என்றது குரங்கு.

‘‘நண்பனே, கடலுக்கடியில் ஒரு அழகிய மணல்திட்டில் என்வீடு இருக்கிறது. எனவே என் முதுகில் ஏறிக்கொண்டு பயமில்லாமல் இன்பமாய் வா!’’ என்றது முதலை.

குரங்குக்கு ஆனந்தம் பிறந்தது. ‘‘நண்பனே, அப்படியானால் சீக்கிரமாகக் கிளம்பலாமே, ஏன் தாமதிக்கவேண்டும்? இதோ நான் உன் முதுகின்மேல் ஏறிக்கொள்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு, குரங்கு முதலையின் முதுகின்மேல் ஏறிக்கொண்டது.

ஆனால், ஆழமான கடலில் முதலை போவதைப் பார்த்துக் குரங்கு பயந்து நடுங்கிப்போயிற்று. ‘‘அண்ணா மெதுவாகப் போ! அலைகள் அடித்து என் உடம்பெல்லாம் நனைந்துவிட்டது’’ என்றது.

அதைக் கேட்டதும் முதலைக்கு ஒரு யோசனையுண்டாயிற்று. இந்தக் குரங்கு என் முதுகிலிருந்து நழுவினால் ஒரு அங்குலம் கூட அப்பால் செல்லமுடியாது, அத்தனை ஆழமான கடல் இது. என் பிடியில் சிக்கிக் கொண்டுவிட்டது. ஆகவே இதனிடம் என் நிஜ நினைப்பைச் சொல்லிவிடுகிறேன். தன் இஷ்ட தெய்வத்தை அது நினைத்துப் பிரார்த்தித்துக் கொள்ளட்டும் என்று எண்ணியது.

குரங்கைப் பார்த்து, ‘‘நண்பனே, என் மனைவி சொல்லியபடி உன்னை நம்பவைத்து, உன்னைக் கொல்வதற்காக வீட்டுக்கு அழைத்துப் போகிறேன். இனி உன் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தித்துக்கொள்’’ என்றது முதலை.

‘‘அண்ணா, உனக்கோ அண்ணிக்கோ நான் என்ன தீங்கு செய்தேன்? என்னை ஏன் கொல்லப்பார்க்கிறீர்கள்?’’ என்று குரங்கு கேட்டது.

‘‘கேள், நீ கொடுத்த பழங்கள் அவளுக்கு அமிர்தம் போல் ருசியாயிருந்தன. ஆகவே உன் நெஞ்தைத் தின்ன வேண்டும் என்று அவள் ஆவலாயிருக்கிறாள். அதனால்தான் இப்படிச் செய்தேன்’’ என்றது முதலை.

உடனே சமயோசித புத்தியுள்ள குரங்கு, ‘‘அடடா அப்படியா சங்கதி? அதை நீ ஏன் அங்கேயே என்னிடம் சொல்லவில்லை? நண்பனே, ருசி மிகுந்த நாவற்பழங்களை நாவல்மரத்தின் பொந்தில் மறைத்து வைத்திருக்கிறேன். முன்பே சொல்லியிருந்தால் அண்ணிக்காக அதை எடுத்துக்கொண்டு வந்திருப்பேனே! அந்த ருசி மிகுந்த நாவற்பழங்களை சாப்பிட்டால் நீண்ட காலம் இளமையுடன் உயிர் வாழலாம்!’’ என்றது குரங்கு.

அதைக் கேட்டதும் முதலைக்கு ஆனந்தம் ஏற்பட்டது. ‘‘நண்பனே, அப்படியானால் அந்த நாவற்பழங்களை எனக்குக் கொடு, என் துஷ்ட மனைவி அதைச் சாப்பிட்டு தன் உபசாவத்தை முடிப்பாள். உன்னை நாவல் மரத்துக்கே திரும்ப அழைத்துச் செல்கிறேன்’’ என்று சொல்லிற்று.

சொன்னபடியே முதலை நாவல்மரத்தடியை நோக்கித் திரும்பிச் சென்றது. வழி நெடுக குரங்கு ஒவ்வொரு தெய்வத்தையும் நூற்றுக்கணக்கான முறை வேண்டிக்கொண்டே போயிற்று.

 எப்படியோ ஒருவிதமாக கரைக்கு வந்ததும், உயர உயரத் தாவிக் குதித்துச் சென்று அந்த நாவல் மரத்தின்மேல் ஏறிக்கொண்டது. ஏறிக்கொண்டே, ‘‘நல்லகாலம்! நான் பிழைத்துக்கொண்டேன். நம்பிக்கை வைக்கத் தகாதவனிடம் நம்பிக்கை வைக்காதே! நம்பிக்கையானவனையும் நம்பாதே! நம்பிக்கை வைப்பதால் விபத்து ஏற்பட்டு வேரோடு அழித்து விடுகிறது. என்று சொல்வதில் நியாயமிருக்கிறது. ஆகவே, இன்றைக்கு நிஜமாக நான் மறுபிறப்பெடுத்திருக்கிறேன்’’ என்று குரங்கு எண்ணியது.

குரங்கிடம் முதலை, ‘‘நண்பனே, நாவற்பழங்களை கொடு எனக்கு’’ என்றது.

குரங்கு சிரித்துவிட்டு நிர்ப்பயமாகப் பதில் சொல்லிற்று. ‘‘சீ, மூடா! நம்பிக்கைத் துரோகி! உன்னுடைய உண்மையான குணம் எனக்கு தெரிந்துவிட்டது. உன் வீட்டைப் பார்த்துக்கொண்டு போய்விடு. இனிமேல் இந்த நாவல்மரத்தடிக்கு வராதே!” என்றது குரங்கு.

‘‘முட்டாள்தனமாக இதனிடம் என் எண்ணத்தை ஏன் வெளியிட்டேன்? எப்படியாவது இதனுடைய நம்பிக்கையைப் பெற வழியுண்டா? நம்பவைக்கப் பேசிப்பார்க்கிறேன்’’ என்று எண்ணியது.

‘‘நண்பனே, விளையாட்டுக்காகத்தான் அப்படிச் சொன்னேன். உன் மனதையறிய விரும்பினேன். அவ்வளவுதான். என் வீட்டுக்கு விருந்தாளியாக வா! அண்ணி உன்னைப் பார்க்க ஆவலோடிருக்கிறாள்’’ என்று முதலை சொல்லிற்று.

‘‘துஷ்டா, உடனே நீ போய்விடு. நான் வரமாட்டேன்’’ என்றது குரங்கு. அதைக்கேட்டு முதலை மிகுந்த வெட்கமடைந்தது. அந்த இடத்தை விட்டுச் சென்றது.

நீதி: ஒருவன் மற்றவர்களை ஏமாற்ற நினைத்தால், கண்டிப்பாக ஒருநாள் எல்லாவற்றையும் இழந்து ஏமாறுவான்!

இன்றைய செய்தி துளிகள் :

1.உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று ( 02.08.2018 ) நடைபெறுகிறது - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

2.B.Ed - படிப்புகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்!

 3.காமராஜர் விருதுக்கு, மாவட்ட வாரியாக, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் விபரம் சேகரிக்கப்படுகிறது.

4.எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு முதலாமாண்டு வகுப்பு தொடக்கம்: மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு

5.மகளிர் ஹாக்கி கால் இறுதிக்கு இந்தியா தகுதி
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post