பீகாரில் பொதுத்தேர்வில் மொத்த மதிப்பெண்களை விடவும் மாணவர்கள் கூடுதலாக மதிப்பெண் பெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 100 சதவீதத்திற்கு 130 சதவீத மதிப்பெண்கள் சில மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது அங்கு சர்ச்சையை கிளப்பியுள்ளது.ஒவ்வொரு வருடமும் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெறும் போதும் பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவரும்போதும் பல்வேறு சர்ச்சைகளை சந்திக்கும் மாநிலம் பீகார். காரணம் தேர்வில் நடைபெறும் முறைகேடுகள்தான். கடந்த 2015ம் ஆண்டு பீகாரில் நடந்த 10ம் வகுப்பு பொது தேர்வின் போது மாணவர்கள் காப்பி அடித்து தேர்வு எழுதினார்கள். அவர்களுக்கு உறவினர்கள் கட்டிடங்கள் மீது ஏறி ‘பிட்’ வழங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதனையடுத்து 2016ம் ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 444 மதிப்பெண்கள் பெற்று ரூபிராய் எனும் மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இவரிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுத்தபோது ‘பொலிட்டிகள் சயின்ஸ்’ என்றால் என்ன என்ற கேள்விக்கு ‘சமைப்பது’ என அவர் பதில் அளித்தார். இது பெரும் சர்சசைக்குள்ளானது. அதை தொடர்ந்து பீகார் கல்வி வாரியத்தின் வல்லுநர் குழு கேட்ட கேள்விக்கும் அவர் தவறான பதில்களையே அளித்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இதேபோல அறிவியலில் 100க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களும் பதில் அளிக்க முடியாமல் திணறினார்கள். இதையடுத்து தேர்வில் முறைகேடுகள் நடந்தது அம்பலமானது.இதையடுத்து இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகளின் போது பீகாரை சேர்ந்த மாணவி முதலிடம் பிடித்தார். கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளில் பின்தங்கி இருக்கும் பீகாரிலிருந்து அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வந்தது தெரியவந்தது. வருகைப்பதிவு இல்லாமல் அவர் பள்ளி இறுதித்தேர்வு எழுதியது எப்படி எனவும் சர்ச்சை எழுந்தது.இந்நிலையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வில் 100 சதவீதத்திற்கு 130 சதவீத மதிப்பெண்கள் சில மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல இயற்பியலில் 35 மதிப்பெண்களுக்கு பீம் குமார் என்ற மாணவருக்கு 38 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல வேதியியலில் சந்தீப் ராஜ் என்ற மாணவருக்கு செய்முறை தேர்வில் மொத்த மதிப்பெண்ணான 35க்கு 39 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.
வைஷாலியை சேர்ந்த ஜான்வி சிங் எனும் மாணவி உயிரியல் தேர்வை எழுதவில்லை. ஆனால் அந்த தேர்வில் அவருக்கு 18 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. ராகுல் குமார் எனும் மாணவர் கணிதத்தில் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு 35க்கு 40 மதிப்பெண்களை பெற்றுள்ளார். பீகார் பள்ளி தேர்வு வாரியத்தால் (BSEB) நடத்தப்பட்ட பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியாகின. அதில் மொத்தம் 12 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது
Post a Comment