Title of the document


 ‘வீட்டுக் கடன் பெறுவதற்குக் குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகள் பணி செய்திருக்க
வேண்டும்’ என்ற விதியை மாற்றி, ‘நான்கு ஆண்டுகள் பணி நிறைவு செய்திருந்தால் போதும்’ என்கிற புதிய அரசாணைக் கொண்டு வந்திருப்பதன்மூலம் இன்னும் அதிகமானவர்கள் சொந்த வீடு வாங்க வழி செய்துதந்திருக்கிறது தமிழக அரசாங்கம்.   கடந்த ஐந்து ஆண்டுகளில் வீட்டுக் கடன்மீது அடுத்தடுத்து நான்கு சலுகைகளைத் தந்து ஆச்சர்யப் படுத்தியது  தமிழக அரசு. அந்த நான்கு என்னென்னவெனில்,

1. வீடு கட்டும் கடன் வரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தியது.

2. மனையின் முக்கியத்துவம் கருதி, மொத்த வீட்டுக் கடனில் மனை வாங்க 20% என்றிருந்ததை மாற்றி, வீட்டுக் கடனில் சரிபாதித் தொகை வரை மனை வாங்க அனுமதி.

3. வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதம் குறைப்பு.

4. ஏழாவது சம்பள கமிஷன் நடைமுறையின்படி, ஊதிய மேம்பாடு; அதனால் அதிகபட்சக் கடன் தொகை பெறும் வாய்ப்பு.

இந்த நான்கு சலுகைகளுக்கும் சிகரம் வைத்தாற்போன்று வந்திருக்கிறது இப்போது வந்திருக்கும் ஐந்தாவது சலுகை. அதுமட்டுமல்ல, ஐந்து வருடப் பணி காலத்தைவிடக் குறைவான காலம் கொண்டவர்கள் வீட்டுக் கடன் பெற முடியாது. கடனைத் திரும்பச் செலுத்த 15 ஆண்டுகளும், வட்டியைத் திரும்பச் செலுத்த  ஐந்து ஆண்டுகளும் என அதிக பட்சக் காலக்கெடு 20 ஆண்டு களாகும். எனவே, 40 வயதுக்குப் பிறகு வேலைக்குச் சேருபவர்கள், அந்தக் கடனை அடைக்க முடியாது. அந்த வகையில் 24 மாத பணித் தகுதிக் குறைப்பு என்பது பெரிதும் பயன் தரும். இதனால் ஓய்வுக்காலத்துக்கு 24 மாதங் களுக்கு முன்பே பணத்தைக் கட்டி முடித்துவிட முடியும். இதன்மூலம் வேலையில் இருக்கும் கடைசி 24 மாதங்களில் சேர்க்கும் தொகையைப் பிள்ளைகளின் கல்வி, திருமணத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

படித்து முடித்தவுடன் 25 வயதிலேயே மருத்துவர், துணை ஆட்சியர் உதவிப் பேராசிரியர், பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டப் படிப்பு ஆசிரியர் போன்றோர் வேலைக்குச் சேர்ந்த புதிதிலேயே சொந்த வீட்டின் அவசியம் கருதி, ஆறு ஆண்டுகள்  காத்திருக்க இயலாத நிலையில், பிற நிதி நிறுவனங்களில் மூலம் வீட்டுக் கடன் பெறக்கூடும். தற்போது, பணித்தகுதி நான்கு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு இருப்பதால்,  இவர்கள் அனைவருக் கும் வீட்டுக் கடன் எளிதில் கிடைக்கும்.   நடுநிலையான பதவிகளில் புதிதாக வேலைக்குச் சேர்ந்துள்ள கணவன்-மனைவி ஆகிய இருவருமே இதன்மூலம் வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டலாம். உயர்நிலை ஊதியம் பெறுவோர் மட்டுமன்றி, மத்திய நிலை ஊதியம் பெறும் செவிலியர், அமைச்சுப் பணியினர் மற்றும் நிலையில் உள்ள பல்வேறு பதவியினரும் தகுதியான அளவுக்குக் கடனைப் பெற்று, வீடு கட்டுவதற்குச் சரியான தருணம் இது.

அடிப்படைப் பணியில் (Basic Service) உள்ள ஊழியர்களும்கூட ரூ.15 லட்சம் வரை வீட்டுக் கடன் பெற வாய்ப்புண்டு. ஆனால், வீட்டின் தரைப்பரப்பு (Floor Area) 22 சதுர மீட்டருக்குக் குறையக் கூடாது என உள்ள நிபந்தனையை மறந்துவிடக் கூடாது.

சில கூடுதல் தகவல்கள்

முறையான சம்பள ஏற்ற முறை யில் (Regularisation Scale of Pay) அமைந்த பதவியில், தகுதிகாண் பருவம் முடித்து, நான்கு ஆண்டு  பணிக்காலமும் நிறைவு செய்த, அடிப்படைப் பணியாளர் (Basic Service) முதல், மேல்நிலைப் பணியாளர் (Superior Service) வரை தமிழக அரசு ஊழியர் அனைவரும் வீட்டுக் கடன் பெறலாம்.

*  நான்கு ஆண்டுகள் பணிக்காலம் என்பது பணி வரன் (Regularisation) செய்த நாள் முதல் கணக்கிடப்படும்.

*  மனை வாங்க, வீடு கட்ட அனுமதி கோரி, துறைத் தலைமைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

*  மனைவியின் பெயரில் உள்ள சொத்தாக இருந்தால், அவருடைய எழுத்துப்பூர்வமான அனுமதி பெற்றுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு மனை பெற துறை அனுமதி அவசியமில்லை.

*  அசல் தொகையைத் திரும்பச் செலுத்த அதிகபட்சத் தவணை 180  மாதங்கள் என்றாலும், தவணையின் எண்ணிக்கையை 100 மாதங்கள் என்கிற அளவில் குறைத்துக்கொண்டால், பெரிய அளவில் வட்டி மிச்சமாகும். அதாவது, கடன் தொகையில் 50 சதவிகிதத்துக்கு உட்பட்டு வட்டி இருக்கும். அல்லாதபட்சத்தில் வட்டியானது அசல் தொகையின் 80 சதவிகிதத்துக்கும் அதிகமாகலாம்.

*  தற்போதுள்ள பதவியில் நான்கு ஆண்டுகள் பணிநிறைவு செய்த ஊழியர், போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று, மேம்பட்ட பதவிக்கு (தமிழக அரசிலேயே) செல்வதாக இருப்பினும், தற்போதே இந்த வீட்டுக் கடன் பெற விண்ணப்பித்துவிடலாம். துறை மாறுதல் காரணமாகக் கடன் பெறுவது பாதிக்கப்படாது.

*  இதேபோல், தமிழக அரசு ஊழியர் ஒருவர் சம்பளமில்லா விடுப்பில், மனிதவள மேம்பாட்டு நிறுவனம் மூலம் வெளிநாடு சென்று வேலை பார்க்கலாம். இப்படி வீட்டுக் கடன் பெற்றவர்கள், ஓராண்டுக்கான தவணைத் தொகையை முன்னதாகச் செலுத்திவிட்டு வெளிநாடு சென்று வேலை பார்க்கலாம். இப்படி வீட்டுக் கடன் பெற்றவர்கள், ஓராண்டுக்கான தவணைத் தொகையை முன்னதாகச் செலுத்திவிட்டு வெளிநாடு சென்று வேலை பார்க்கலாம். திரும்பி வந்து அரசுப் பணியில் தொடரலாம். ஐந்தாண்டுகள் இவ்வாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பில் இருக்கலாம்.

*  வேலைக்கு வரும்முன்போ அல்லது வந்தபின்போ, சொந்தப் பணத்தைக் கொண்டு வீடு கட்ட ஆரம்பித்து, மேற்கொண்டு கட்ட நிதி ஆதாரம் இல்லாமல் நின்றுபோன வீட்டுக்கும் வீட்டுக் கடன் பெறலாம். மிஞ்சியுள்ள வேலைக்குத் தேவையான பணமதிப்பீடு (Estimate) எவ்வளவோ, அந்தத் தொகை கடனாகக் கிடைக்கும்.

*  மிதமான சம்பளம் கொண்ட தமிழக அரசுப் பதவியில் உள்ள தம்பதி, இருவரின் சம்பளத் தொகையைக் கூட்டி வரும் 75 மாத சம்பளத் தொகையைக் கடனாகப் பெறலாம். வரம்பு ரூ.25 லட்சம் கடன் பிடித்தத்தை ஒருவரின் சம்பளத்தில் தொடர அனுமதிக்கலாம்.

* ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்ட ஊழியரும் விண்ணப்பிக்க லாம். ஒழுங்கு நடவடிக்கை முடிவுக்கு வந்தபின் விண்ணப்பம் பரிசீலனைக்கு வரும். மேலும், எந்தவொரு வீட்டுக் கடன் நிறுவனம் விதிக்கும் வட்டியைவிட தமிழக அரசு விதிக்கும் வட்டி குறைவு என்பதால், சுமார் 45% வரை பணம் மிச்சமாகும்.

ஆக, வீட்டுக் கடன் மூலம் வீடு கட்ட அரசு நிறைய சலுகைகளை அளித்துவிட்டது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post