Title of the document

மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்க ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் இரு உளவியல் ஆசிரியர்கள் நியமனம்  செய்யப்பட வேண்டும் பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் ரீதியிலான பிரச்னைகளை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு காண மாநில அளவில் ஒரு குழுவினை அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பள்ளிக்கல்வி இயக்குனர் தலைவராகவும், நாட்டு நலப்பணி திட்ட இணை இயக்குனர் செயலாளராகவும், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் உறுப்பினர்களாகவும், உளவியல் மருத்துவர்கள் மற்றும் கல்வியாளர்களை கொண்டு மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்து அதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியிலான பிரச்னைகளை கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளி மாணவர்கள் தேர்வு பயம் உட்பட உளவியல் பிரச்னைகளை எதிர்கொள்வதில் சிக்கல்கள், வளர் இளம் பருவ பிரச்னைகள், மன அழுத்தம் உள்ளிட்ட உளவியல் பிரச்னைகளுக்கு எளிதல் பாதிக்கப்பட்டு எதிர்மறையான செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களுக்கு உளவியல் தொடர்பான பிரச்னைகளுக்கு தேவையின் அடிப்படையில் உளவியல் ஆலோசனைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களது நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பள்ளியிலும் பணிமூப்பு, தகுதியும் திறமையும் உள்ள ஒரு ஆண் ஆசிரியர் மூலம் மாணவர்களுக்கும், ஒரு பெண் ஆசிரியை மூலம் மாணவிகளுக்கும் தேவையின் அடிப்படையில் உளவியல் ஆலோசனைகளை வழங்க பொறுப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இதனை செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

மேலும் ஒவ்வொரு பள்ளியிலும் பொறுப்பு ஆசிரியர்களாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் மற்றும் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் மூலம் நடத்தப்படும் இதர பயிற்சிகளை போன்று பயிற்சி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் பொறுப்பு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் பெயர், பதவி உள்ளிட்ட விவரங்களை பெற்று முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒரு தனி பதிவேட்டில் பராமரிக்க வேண்டும். மேலும் மாணவர்களுக்கு பொறுப்பு ஆசிரியர்கள் வழங்கிய  ஆலோசனை விவரங்களை பதிவு செய்ய ஒரு காலமுறை பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். மாணவர்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளை தங்களது மாவட்டத்தில் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி மற்றும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post