Title of the document


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து,பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத ஊதிய நிலுவைத்தொகையை உடனடியாக ரொக்கமாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை தலைமைச்செயலகம் அமைந்துள்ள கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது..

போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தடுக்கும் வண்ணம் தமிழக போலீசார் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் முக்கிய நிர்வாகிகளை நேற்று முன்தினம் முதலே கைது செய்த வண்ணம் உள்ளனர்.

இருந்தபோதிலும், போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பின் செய்தி தொடர்பாளரும், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவருமான கு.தியாகராஜன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:-

எங்களது கோரிக்கைகள் அனைத்தும் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா மற்றும் தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டவையே. அவற்றை செயல்படுத்தாத காரணத்தால் தான் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே கடந்த பிப்ரவரி 21-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டோம். பின்னர் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டி உள்ளதை கருத்தில் கொண்டு எங்களது போராட்டத்தை மே 8-ந் தேதிக்கு (இன்று) மாற்றினோம். அதன்படி, நாளை (இன்று) கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த தயாரானோம்.

ஆனால், எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண விரும்பாத தமிழக அரசு எங்கள் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் என்பவரை நேற்று (நேற்று முன்தினம்) இரவு திருவள்ளூரில் கைது செய்துள்ளது. மேலும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா 3 ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளனர். அதில் மாவட்டத்துக்கு தலா 2 ஒருங்கிணைப்பாளர்களை போலீசார் கைது செய்து உள்ளனர்.

மேலும் கடந்த காலங்களில் போராட்டத்திற்கு வருபவர்களை சென்னைக்கு அருகில் உள்ள சுங்கச்சாவடிகளில் தான் மறித்து கைது செய்வார்கள். ஆனால், இந்த முறை அந்தந்த மாவட்ட எல்லைகளில் உள்ள சுங்கச்சாவடிகளிலேயே வழிமறித்து போலீசார் கைது செய்து உள்ளனர். இதுவரை சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போராட்டத்தை தடுக்க நினைக்கும் தமிழக அரசின் உச்சகட்ட நடவடிக்கையாக, வெளியூர்களில் இருந்து சென்னை வரும் தனியார் பஸ்கள், வேன்களுக்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உரிமம் வழங்கவில்லை. இரவு நேரத்தில் போலீசாரின் சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்தந்த சுங்கச்சாவடியை கடந்து 50 மீட்டர் தொலைவிலும் போலீசார் இரும்பு தடுப்புகளை வைத்து அனைத்து பஸ்களிலும் தீவிரமாக சோதனை செய்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கைது செய்கின்றனர்.

எனினும், ஆசிரியர்களுக்கு விடுமுறை காலம் என்பதால் 2 நாட்களுக்கு முன்பே ஏராளமான ஆசிரியர்கள் சென்னை வந்துவிட்டனர். மேலும், ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கார், ரெயில்கள் மூலம் சென்னை வர உள்ளனர். எனவே ஜாக்டோ-ஜியோ அமைப்புக்கு எத்தனை அச்சுறுத்தல்கள் வந்தாலும், அடக்குமுறைகளை அரசு செயல்படுத்தினாலும் அதை எல்லாம் எதிர்கொண்டு இந்த கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் எழுச்சியுடன் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் இன்று நடைபெற உள்ள கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்துக் கான ஏற்பாடுகளை செய்து வரும் முக்கிய நிர்வாகிகள் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 250 பேர் கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. அலுவலக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post